Published : 07 Jun 2021 01:01 PM
Last Updated : 07 Jun 2021 01:01 PM

ஓடிடியில் 'குட்லக் சகி' வெளியீடு? - தயாரிப்பாளர் பதில்

ஓடிடியில் 'குட்லக் சகி' வெளியாகவுள்ளதாக உருவான செய்திக்கு தயாரிப்பாளர் பதிலளித்துள்ளார்.

நாகேஷ் கூக்குன்னூர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'குட்லக் சகி'. ஆதி, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை சுதிர் சந்திர பத்ரி தயாரித்துள்ளார். தெலுங்கில் தயாராகியுள்ள இந்தப் படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகியவற்றில் டப்பிங் செய்யப்படவுள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட, 'குட்லக் சகி' டீஸருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தற்போது தயாராகியுள்ள படங்களை நேரடியாக ஓடிடியில் வெளியிட, பல்வேறு ஓடிடி நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதில் 'குட்லக் சகி' படக்குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அவர்களும் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனை வைத்து ஓடிடியில் வெளியாகிறது 'குட்லக் சகி' என்று செய்திகளும் தெலுங்கு ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

இந்தச் செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக 'குட்லக் சகி' படத்தின் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"நாங்கள் படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்யப் போகிறோம் என்று ஊடகங்களில் தவறான செய்தி வெளியாகியுள்ளது. இதுபோன்ற தகவல்களை வெளியிட வேண்டாம் என்று ஊடகத்தினரிடம் வேண்டுகோள் வைக்கிறேன். அவை எதுவும் உண்மையில்லை. அப்படி ஏதேனும் இருந்தால் நாங்கள் அதுகுறித்த தகவல்களைத் தெரிவிக்கிறோம். அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்".

இவ்வாறு 'குட்லக் சகி' தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x