Published : 02 Jun 2021 07:11 PM
Last Updated : 02 Jun 2021 07:11 PM

டப்பிங் பேசும்போது கிடைக்கும் திருப்தி: ஐஸ்வர்யா லட்சுமி கருத்து

சென்னை

ஒரு படத்தில் பணியாற்றிய முழுமையான திருப்தி டப்பிங் பேசும்போது கிடைக்கிறது என்று ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு, கலையரசன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜகமே தந்திரம்'. ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் ஜூன் 18-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தப் படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகளைப் படக்குழு தொடங்கியுள்ளது.

'ஜகமே தந்திரம்' படம் தொடர்பாக நாயகி ஐஸ்வர்யா லட்சுமி அளித்த பேட்டியில், தானே டப்பிங் பேசினால் மட்டுமே திருப்தி தருவதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:

" 'ஜகமே தந்திரம்' திரைப்படத்தில் என் வசனங்களை நான்தான் பேசியிருக்கிறேன். ஏனென்றால் அதுதான் எனக்குத் திருப்தியைத் தருகிறது. ’ஆக்‌ஷன்’ படத்தில் நடித்தபோது எனது தமிழ் மிக மோசமாக இருக்கும். எனது தமிழ் நண்பர்கள் என்னைக் கேலி செய்வார்கள். தமிழைக் கொலை செய்யாதே என்பார்கள். ஆனால், இப்போது நன்றாகத் தேறியிருப்பதாக நினைக்கிறேன்.

’பொன்னியின் செல்வன்’ படத்திலும் என் குரலில் டப்பிங் பேச வேண்டும் என்று மணி சாரைக் கேட்டு வருகிறேன். ஒரு படத்தில் பணியாற்றிய முழுமையான திருப்தி டப்பிங் பேசும்போது கிடைக்கிறது".

இவ்வாறு ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x