Published : 31 May 2021 08:17 PM
Last Updated : 31 May 2021 08:17 PM

அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறையினர் விசாரணை

சென்னை

அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணையில் இறங்கியுள்ளனர்.

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் 'வலிமை' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மட்டுமே மிச்சமுள்ளது. இந்தக் காட்சிகளை வெளிநாட்டில் படமாக்கவுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக, முன்னணி பிரபலங்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. உடனடியாகக் காவல்துறையினர் விசாரணையில் இறங்கி, சம்பந்தப்பட்ட நபரை விசாரித்து, கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். சிலரை எச்சரிக்கை செய்து அனுப்பி விடுகிறார்கள்.

இன்று (மே 31) மாலை காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர், நடிகர் அஜித் வீடு மற்றும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் சில நிமிடங்களில் வெடிகுண்டு வெடிக்க உள்ளதாகத் தகவல் தெரிவித்துவிட்டு இணைப்பைத் துண்டித்தார்.

உடனே காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து நடிகர் அஜித் வசிக்கும் திருவான்மியூர் காவல் நிலையத்திற்கும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடர்பாக கிழக்கு கடற்கரை காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே போலீஸார் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் சென்று அஜித் வீடு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். சோதனையில் அது புரளி எனத் தெரியவந்தது. மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணை வைத்துத் தேடியபோது வழக்கமாக மிரட்டல் விடுக்கக்கூடிய மரக்காணத்தைச் சேர்ந்த புவனேஷ் என்பது தெரியவந்தது.

புவனேஷ் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். ஏற்கெனவே முதல்வர் பழனிசாமி, நடிகர் ரஜினி உட்பட பலரது வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x