Published : 31 May 2021 05:03 PM
Last Updated : 31 May 2021 05:03 PM

தீர்ப்புக்காகக் காத்திருக்கும் 'விக்ரம்' படக்குழு

'இந்தியன் 2' படம் தொடர்பான தீர்ப்புக்காகக் காத்திருக்கிறது 'விக்ரம்' படக்குழு.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ள படம் 'விக்ரம்'. இதன் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த ஊரடங்கு சமயத்தில் கமலுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வை முடித்துவிட்டார் லோகேஷ் கனகராஜ். இதில் ஃபகத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் கமலுடன் நடிக்கவுள்ளனர்.

ராஜ்கமல் இண்டர்நேஷனல் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பை கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தொடங்கிவிடலாம் என்றிருக்கும் போதுதான் கமலுக்கு 'இந்தியன் 2' படத்தால் சிக்கல் ஏற்பட்டது. தங்கள் படத்தை முடித்துவிட்டுத்தான் ஷங்கர் இதர படங்களுக்குச் செல்ல வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது லைகா நிறுவனம்.

இந்த வழக்கில் ஷங்கர் தரப்பிலிருந்தும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கவில்லை. இதனால் 'விக்ரம்' படக்குழு காத்திருக்கிறது. 'இந்தியன் 2' படத்தை உடனே தொடங்கவேண்டும் என்று தீர்ப்பு வந்தால், கமல் உடனடியாகத் தேதிகள் கொடுத்தாக வேண்டும். அப்படியில்லை என்றால் கமல் 'விக்ரம்' படத்துக்குத் தேதிகள் கொடுத்துவிடுவார்.

மொத்தத்தில், 'இந்தியன் 2' வழக்கின் தீர்ப்பை முன்வைத்தே 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது என்பது மட்டும் உறுதி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x