Published : 27 May 2021 07:08 PM
Last Updated : 27 May 2021 07:08 PM

பூம்பூம் மாட்டுக்காரரின் திறமை: வாய்ப்பளித்த ஜி.வி.பிரகாஷ்

சமூக வலைதளத்தில் வைரலான பூம்பூம் மாட்டுக்காரரின் திறமையைப் பார்த்து, அவருக்கு வாய்ப்பளித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.

சமூக வலைதளம் மூலம் வைரலாகி, திரையுலகில் பலரும் அறிமுகமாகி வருகிறார்கள். சில மாதங்களுக்கு முன்னர் திருமூர்த்தி என்பவர் பாடிய பாடல் இணையத்தில் வைரலாக, அவருக்கு இசையமைப்பாளர் இமான் வாய்ப்பு வழங்கினார்.

தற்போது, சில தினங்களுக்கு முன்பு பூம் பூம் மாட்டுக்காரர் ஒருவர் நாதஸ்வரம் வாசிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அவர் வாசிக்கும் இசை மிகவும் அற்புதமாக இருந்ததால் பலரும் பகிரத் தொடங்கினார்கள்.

அந்த வீடியோ குறிப்பிட்டு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பதிவில், "இவரைத் தேடிக் கண்டுபிடித்தால், என்னுடைய பாடல் பதிவுக்கு உபயோகப்படுத்திக் கொள்வேன். ரொம்ப திறமனையானவர், அழகாக வாசிக்கிறார்" என்று தெரிவித்தார். உடனடியாக பலரும் அவருடைய பெயர் நாராயணன் எனவும், இது தான் அவரது தொலைபேசி எண் என்றும் அனுப்பத் தொடங்கினார்கள்.

உடனடியாக நாராயணனைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் ஜி.வி.பிரகாஷ். பெங்களூருவில் இருக்கும் நாராயணன் கரோனா அச்சுறுத்தல் எல்லாம் குறைந்தவுடன் சென்னைக்கு வரவுள்ளார்.

அடுத்ததாக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வரும் பிரம்மாண்ட படத்தின் இசைக்கு நாராயணனை உபயோகப்படுத்தவுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x