Published : 24 May 2021 12:37 PM
Last Updated : 24 May 2021 12:37 PM

சஞ்சய் லீலா பன்சாலியின் பிரம்மாண்ட திட்டம்

'கங்குபாய்' படத்துக்குப் பிறகு மிகப்பெரிய பொருட்செலவில் ஒரு படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'கங்குபாய் கதியாவாதி'. இப்படத்தில் ஆலியா பட் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டீஸர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது கரோனா அச்சுறுத்தலால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ‘கங்குபாய்’ படத்துக்குப் பிறகு ஷாரூக் கான் நடிப்பில் ‘இஸார்’ என்ற படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கவுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வந்தது. முதலில் அப்படத்தின் கதை ஆமிர் கானிடம் சொல்லப்பட்டதாகவும், பின்னர் தற்போது அதில் ஷாரூக் நடிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது.

தற்போது இந்தச் செய்தியில் உண்மை இல்லை என்றும், ‘கங்குபாய்’ படத்துக்குப் பிறகு சஞ்சய் லீலா பன்சாலி ‘பைஜு பாவ்ரா’ என்ற படத்தை இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. 2019ஆம் ஆண்டு ‘பைஜு பாவ்ரா’ பட அறிவிப்பை சஞ்சய் லீலா பன்சாலி வெளியிட்டிருந்தார். இப்படத்தை ‘கங்குபாய்’ படத்துக்குப் பிறகு தொடங்க திட்டமிட்டிருந்தார். ஆனால், கரோனா பரவலால் ‘கங்குபாய்’ படப் பணிகள் பாதிக்கப்பட்டன. இதனால் ‘பைஜு பாவ்ரா’ குறித்த எந்தத் தகவலையும் சஞ்சய் லீலா பன்சாலி தரப்பு வெளியிடவில்லை.

கடந்த கரோனா ஊரடங்கில் ‘பைஜு பாவ்ரா’ கதையில் பல்வேறு மாற்றங்களை பன்சாலி செய்துள்ளதாகவும், ‘கங்குபாய்’ பட வேலைகள் நிறைவடைந்ததும், ‘பைஜு பாவ்ரா’ படத்தைத் தொடங்கவுள்ளதாகவும் பன்சாலி தரப்பில் கூறப்படுகிறது. 1952ஆம் காலகட்டத்தை அடிப்படையாகக் கொண்ட இப்படம் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x