

அரசு சொன்னபடி விதிகளைப் பின்பற்றி கரோனாவை ஒழிப்போம் என்று யோகி பாபு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா 2-வது அலையில் நோய்த் தொற்று வேகமாக பரவி வருகிறது. தினமும் 35,000-க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இதனைக் கட்டுப்படுத்த நாளை (மே 24) முதல் ஒரு வாரத்துக்கு முழுமையான ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது தமிழக அரசு. இதற்காக இன்று ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் காலை முதலே பொதுமக்கள் கடைகளில் பொருட்கள் வாங்கக் குவிந்து வருகிறார்கள். இதனை சமூக வலைதளத்தில் பலரும் கடுமையாகச் சாடி வருகிறார்கள்.
இந்நிலையில், கரோனா தொற்று தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடிகர்கள் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார்கள். கரோனா விழிப்புணர்வு தொடர்பாக யோகி பாபு வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
"கரோனா கிருமி தானாகப் பரவுவதில்லை. மனிதர்களால் தான் பரவுகிறது. சங்கிலித் தொடர் போல ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு அதுப் பரவுகிறது. அந்தச் சங்கிலியை நாம் உடைக்க வேண்டும்.
நம் உயிரைக் காக்கத்தான் நம் தமிழக முதல்வர் முழு ஊரடங்கு உத்தரவைப் பிறபித்துள்ளார். அதனால் அரசு சொன்னபடி விதிகளைப் பின்பற்றி கரோனாவை ஒழிப்போம். அரசுக்கு ஒத்துழைப்போம். கரோனாவை வெல்வோம், மக்களைக் காப்போம்"
இவ்வாறு யோகி பாபு தெரிவித்துள்ளார்.