Published : 28 Jun 2014 09:29 AM
Last Updated : 28 Jun 2014 09:29 AM

உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கு உதய் லலித் பெயர் பரிந்துரை?: கோபால் சுப்ரமணியத்துக்குப் பதிலாக தேர்வு

உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்கான பரிசீலனையில் இருந்து கோபால் சுப்ரமணியத்துக்குப் பதில் மூத்த வழக்கறிஞர் உதய் யு.லலித் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.

உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் பெயரை நீதிபதிகள் நியமனக் குழு பரிந்துரை செய்தது. அவரது பெயரை மத்திய அரசு நிராகரித்து திருப்பி அனுப்பிவிட்டது.

கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அருண் மிஸ்ரா, ஒடிஷா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல், மூத்த வழக்கறிஞர் ரோஹின்டன் நரிமன் ஆகியோரது பெயர்களை மத்திய அரசு ஏற்றுக் கொண்டு விட்டது.கோபால் சுப்ரமணியம் தன் பெயரை மீண்டும் பரிந்துரைக்க வேண் டாம் என்று தலைமை நீதிபதி லோதாவுக்கு கடிதம் அனுப்பி விட்டார். இதையடுத்து, மூத்த வழக்கறிஞர் உதய் யு.லலித் பெயர் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. தலைமை நீதிபதியிடம் உதய் யு.லலித் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உதய் யு.லலித் 2ஜி வழக்கில் சிபிஐ சிறப்பு அரசு வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். மான் வேட்டை வழக்கில் நடிகர் சல்மான் கான், கொலை வழக்கில் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, ஷொராபுதீன் ஷேக் என்கவுன்டர் வழக்கில் அமித் ஷா ஆகியோருக்கு உதய் யு.லலித் ஆஜராகி வாதாடி உள்ளார்.

அவர், வரும் ஞாயிற்றுக் கிழமை தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து தன் ஒப்புதலை தெரிவிப்பார் என்று கூறப் படுகிறது. நீதிபதி பதவிக்கு உதய் யு.லலித் பெயர் வரும் 30-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x