Published : 17 May 2021 12:47 PM
Last Updated : 17 May 2021 12:47 PM

‘ரஜினிக்காக ஒரு கதை வைத்திருக்கிறேன்’ - அல்போன்ஸ் புத்திரன் பகிர்வு

ரஜினியை வைத்துப் படம் இயக்குவீர்களா என்ற ரசிகரின் கேள்விக்கு இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் பதிலளித்துள்ளார்.

2015ஆம் ஆண்டு அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் 'பிரேமம்'. நிவின் பாலி, மடோனா செபாஸ்டியன், சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் நடித்த அனைவருமே இப்போது முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள்.

'பிரேமம்' வெற்றிக்குப் பிறகு 5 ஆண்டுகளாக எந்த ஒரு பட அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்து வந்த அல்போன்ஸ் புத்திரன், கடந்த ஆண்டு தனது அடுத்த படம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவித்தார். ‘பாட்டு’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஃபகத் பாசில் நாயகனாக நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் அல்போன்ஸ் புத்திரனின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவில் பயனர் ஒருவர், ரஜினியை வைத்துப் படம் இயக்குவதற்காகக் கதை வைத்துள்ளீர்களா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு அல்போன்ஸ் புத்திரன் அளித்த பதில்:

''ரஜினி சாருக்குக் கதை வைத்திருக்கிறேன். ‘பிரேமம்’ படத்துக்குப் பிறகு அவரைச் சந்திக்க முயற்சி செய்தேன். ஆனால், இதுவரை சந்திக்க இயலவில்லை. ரஜினி சாரை வைத்து நான் படம் எடுக்க வேண்டும் என்று என் தலையில் எழுதியிருந்தால் அது நடந்தே தீரும். நேரம் சரி ஆகட்டும். நாம் பாதி வேலை செய்துவிட்டால் மீதி வேலையைக் கடவுள் பார்த்துக்கொள்வார் என்று நம்பிக்கை உள்ளது. கடவுள் கரோனாவை அழிப்பதில் பிஸியாக இருக்கிறார் என்று நினைக்கிறேன். அதன்பிறகு திரும்பவும் முயற்சி செய்வேன்''.

இவ்வாறு அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x