Published : 17 May 2021 12:19 PM
Last Updated : 17 May 2021 12:19 PM

யாரிந்த தேவதூதன்?- லிங்குசாமி குறித்து வசந்தபாலன் நெகிழ்ச்சிப் பதிவு

கரோனா தொற்றிலிருந்து மீண்ட இயக்குநர் வசந்தபாலன் தனது நண்பரும் இயக்குநருமான லிங்குசாமி குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நாடு முழுவதும் கரோனா 2-வது அலையின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குநர் வசந்தபாலனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வசந்தபாலனை அவரது நண்பரும் இயக்குநருமான லிங்குசாமி மருத்துவமனைக்குச் சென்று நலம் விசாரித்துள்ளார்.

தற்போது கரோனாவிலிருந்து மீண்டுள்ள வசந்த பாலன் அது குறித்து கவிதை வடிவில் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

வீரம் என்றால் என்ன ?
பயமில்லாத மாதிரி நடிக்கிறது.
பழைய வசனம்...

வீரம் என்றால் என்ன தெரியுமா ?
பேரன்பின் மிகுதியில்
நெருக்கடியான நேரத்தில்
அன்பானவர்கள் பக்கம் நிற்பது.
புதிய வசனம்...

போன வாரத்தில்
மருத்துவமனையின்
தீவிர சிகிச்சைப் பிரிவில்
அனுமதிக்கப்பட்டிருந்தேன்.

இந்தச் செய்தி கேள்விப்பட்ட ஜீவன் ஒன்று
இரவு முழுக்க நித்திரையின்றி
இரவு மிருகமாய்
உழண்டவண்ணம் இருக்கிறது

விடிந்தும் விடியாமலும் அதன் கால்கள்
மருத்துவமனைத் தேடி விரைகிறது

எனைப் பார்க்க அனுமதிக்க வேண்டுமென மருத்துவமனை நிர்வாகத்திடம் போராடுகிறது
தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள ஒருவரைப் பார்க்க அனுமதிக்க இயலாது என்று மருத்துவமனை நிர்வாகம் மறுக்கிறது
இடையறாது சண்டக்கோழியாய் போராடுகிறது
உங்களை அனுமதித்தால் உங்களுக்குத் தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது
பரவாயில்லை சில நிமிடங்கள் அனுமதியுங்கள் என்று இறைஞ்சுகிறது

வேறு வழியின்றி
முழு மருத்துவ உடைகளுடன்
அனுமதிக்கப்படுகிறது

மெல்ல என் படுக்கையை ஒட்டி
ஒரு உருவம் நின்றபடியே
எனைப்பார்த்த வண்ணம் இருக்கிறது.
ஆண் பென்குவின் போன்று தோற்றமளிக்கிறது.
எனையே உற்றுப்பார்த்த வண்ணம் இருக்கிறது

மருத்துவரா
இல்லை
செவிலியரா
என்று
எனக்கு வித்தியாசம் தெரியவில்லை

உள்ளிருந்து "டாக்டர்" என உச்சரிக்கிறேன்.
"லிங்குசாமி டா" என்றது அந்தக் குரல்...
அத்தனை சுவாசக்கருவிகளையும் மீறி மொத்த சக்தியையும் திரட்டி
"டே! நண்பா" என்று கத்தினேன்.

"பாலா" என்றான்...
அவன் குரல் உடைந்திருந்தது.
வந்திருவடா…
"ம்" என்றேன்
என் உடலைத் தடவிக்கொடுத்தான்
எனக்காக பிரார்த்தனை செய்தான்
என் உடையாத கண்ணீர்பாறையிலிருந்து ஒரு கண்ணீர்த்துளி கசிந்தது.
தைரியமாக இரு
என்று என்னிடம் சொல்லிவிட்டு
செல்லும் போது
யாரிந்த தேவதூதன் என்று மனசு அலட்டியது.

இந்த உயர்ந்த நட்புக்கு
நான் என்ன செய்தேன் என்று
மனம் முப்பது ஆண்டுகள்
முன்னே பின்னே ஓடியது.

"உனக்காக நான் மீண்டு வருவேன் நண்பா….."
என்றேன்.
நானிருக்கிறேன்
நாங்களிருக்கிறோம்
என்றபடி
ஒரு சாமி
என் அறையை விட்டு வெளியேறியது.

கோடிக்கணக்கான நட்பின் கரங்கள்
எனை அணைத்தது போன்று இருந்தது.
ஆயிரம் முத்தங்கள் லிங்கு…..
ஆயிரம் ஆண்டுகள் புகழுடன் வாழ்வாய்..”

இவ்வாறு அந்தப் பதிவில் வசந்தபாலன் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x