Published : 17 May 2021 10:18 AM
Last Updated : 17 May 2021 10:18 AM

‘கர்ணன்’ படத்தில் சொந்தக் குரலில் பேசாதது ஏன்? - நடிகர் லால் விளக்கம்

‘கர்ணன்’ படத்தில் தனது சொந்தக் குரலைப் பயன்படுத்தாதது குறித்து நடிகர் லால் விளக்கம் அளித்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'கர்ணன்'. தாணு தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

ஏப்ரல் 9-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு விமர்சனம், வசூல் என இரண்டு விதங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. தனுஷ் நடிப்பில் வெளியான படங்களில், முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை இந்தப் படம் நிகழ்த்தியது. இப்படம் தற்போது அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் ஏமராஜா என்ற கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் லால் நடித்திருந்தார். இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஆனால், இப்படத்தில் அவர் தனது சொந்தக் குரலைப் பயன்படுத்தவில்லை. இதுகுறித்துப் பலரும் அவரிடம் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லால் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

'' ‘கர்ணன்’ படத்தில் ஏமராஜா பாத்திரத்துக்கு ஏன் சொந்தக் குரலைப் பயன்படுத்தவில்லை என்று பலரும் என்னிடம் கேட்டு வருகிறீர்கள். ‘கர்ணன்’ படம் திருநெல்வேலி பின்னணியைக் கொண்ட திரைப்படம் என்பதை நீங்கள் அறிவீர்கள். திருநெல்வேலியின் தமிழ் என்பது சென்னையில் பேசப்படும் தமிழ் மொழியைக் காட்டிலும் மிகவும் வித்தியாசமானது. மலையாளத்தில் கூட திருச்சூர் வட்டார மொழியை ஒருவர் பேச முயன்றால் அதன் அருகில் கூட நெருங்க முடியாது.

‘கர்ணன்’ மொழி மற்றும் கலாச்சாரத்திற்கு அதிக முக்கியவத்துவம் உள்ள ஒரு திரைப்படம். மேலும் தனித்துவமான அந்த வட்டார மொழியைப் பேசுவதன் மூலமே அந்தக் கதாபாத்திரம் முழுமை பெறும். அதில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் உள்ளூர்க்காரர்கள். எனவே என்னுடைய மொழி மட்டும் படத்தில் தனியாகத் தெரிவதற்கு வாய்ப்பு இருந்தது. படத்தில் என்னுடைய பங்களிப்பு 100% இருக்கவேண்டும் என்று நான் விரும்பியதால் எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

இயக்குநர் மாரி செல்வராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோரது கட்டாயத்தின் பேரில் டப்பிங் பணிகளுக்காக சென்னை சென்றேன். எனினும் படத்தின் நலனுக்காக என்னுடைய வேண்டுகோளுக்கு இணங்க திருநெல்வேலியைச் சேர்ந்த ஒருவரது குரல் பயன்படுத்தப்பட்டது. உங்கள் அனைவரது ஆதரவுக்கும், அன்பான வார்த்தைகளுக்கும் நன்றி''.

இவ்வாறு லால் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x