Published : 10 May 2021 05:05 PM
Last Updated : 10 May 2021 05:05 PM

ஆறுதல்‌ சொல்ல முடியாத ஒரு இழப்பு: வெங்கட் பிரபு, பிரேம்ஜி தாயார் மறைவுக்கு சிலம்பரசன் இரங்கல் 

வெங்கட் பிரபு, பிரேம்ஜி சகோதரர்களின் தாயார் மறைவுக்கு நடிகர் சிலம்பரசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர் எனப் பன்முகத் திறமை கொண்டவர் கங்கை அமரன். இவரது மனைவி மணிமேகலை உடல் நலக் கோளாறு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இவர் நேற்று (மே.09) இரவு 11.30 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கங்கை அமரனின் மகன்கள் வெங்கட் பிரபு, பிரேம்ஜி இருவரும் தமிழ்த் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர்கள். வெங்கட் பிரபு முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார். பிரேம்ஜி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் கவனம் ஈர்த்து வருகிறார்.

தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு' படத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார். இவர்கள் அனைவரும் திரையுலக நண்பர்கள் என்பதால் வெங்கட் பிரபு, பிரேம்ஜியின் தாயார் மறைவுக்கு சிலம்பரசன் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

"அன்பு இயக்குநர்‌ வெங்கட்‌ பிரபு மற்றும்‌ நண்பர்‌ பிரேம்ஜி, யுவன்‌ உட்பட என்‌ சகோதரர்களான உங்களுக்கு எப்படி ஆறுதல்‌ கூறுவது எனத்‌ தெரியவில்லை. எதையும்‌ சாதாரணமாக எளிமையாக எடுத்துக்‌கொண்டு செல்பவர்கள்‌ நீங்கள்‌.

கடந்த இரண்டு வருடமாக, இதற்கு முன்‌ நட்பாக இணைந்திருந்தாலும்‌.. இந்த இரண்டு வருடம்‌ இணைந்து பணிபுரியும்‌போது எவ்வளவு அழகாக, எளிமையாக, எந்த சூழ்நிலையையும்‌ கடந்து செல்கிறீர்கள்‌ எனப்‌ பார்த்திருக்கிறேன்‌. ஆனால, அம்மா மீது மிகுந்த அன்பு கொண்ட உங்களுக்கு இதைக்‌ கடப்பது என்பது எவ்வளவு கடினம்‌ என்பதை அறிவேன்‌. அம்மாவின்‌ இழப்பு நிச்சயம்‌ நம்ப முடியாத ஒன்று. ஆறுதல்‌ சொல்ல முடியாத ஒரு இழப்பு. அப்பாவிற்கும்‌, குடும்பத்திற்கும்‌.

உங்கள் அனைவருடனும்‌, இழப்பையும்‌... வேதனையையும்‌ பகிர்ந்துகொள்கிறேன்‌. அம்மாவின்‌ ஆன்மா சாந்தியடைய எல்லாம்‌ வல்ல இறைவனை வேண்டுகிறேன்‌. கண்ணீருடன்‌ சிலம்பரசன்‌" என்று இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x