Published : 30 Apr 2021 11:31 AM
Last Updated : 30 Apr 2021 11:31 AM

வீட்டில் அஞ்சலி செலுத்த முடியாத சோகம்: ஆம்புலன்ஸ் கண்ணாடி வழியே கே.வி.ஆனந்த் உடலை பார்த்து கண்ணீர் சிந்திய குடும்பத்தினர்

பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் இன்று (ஏப்.30) அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார். நள்ளிரவில் அவருக்கு நெஞ்சு வலி மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாகவும், தானே காரை ஓட்டிக் கொண்டு தனியார் மருத்துவமனைக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது. பின்பு அதிகாலை 3 மணியளவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு கே.வி.ஆனந்த் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

கே.வி.ஆனந்த் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக கே.வி.ஆனந்தின் மனைவி மற்றும் மகள் இருவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். கடந்த 24ஆம் தேதி அன்று கே.வி.ஆனந்துக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த சூழலில் இன்று அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு கே.வி.ஆனந்த் உயிரிழந்துள்ளார்.

கரோனா தொற்று இருந்ததால் அவருடைய உடலை வீட்டிற்கு அனுப்பாமல் நேரடியாக பெசன்ட் நகரில் உள்ள மின் மயானம் கொண்டு செல்ல மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது. ஆம்புலன்சில் ஒரு குளிர்சாதனப் பெட்டிக்குள் பாதுகாப்பு உடைகள் அணிவிக்கப்பட்ட நிலையில் அவரது உடை வைக்கப்பட்டிருந்தது.

மின்மயானத்துக்குச் செல்லும் வழியில் அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்துவதற்காக அவரது வீட்டின் வாசலிலேயே ஆம்புலன்ஸ் சிறிது நேரம் நின்றது. அப்போது கே.வி.ஆனந்தின் மனைவி மற்றும் மகள்கள் ஆம்புலன்ஸின் கண்ணாடி வழியே அவரது உடலை பார்த்து கண்ணீர் விட்டு அழுதனர். பின்னர் சிறிது நேரத்தில் அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானம் கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x