Published : 27 Apr 2021 05:36 PM
Last Updated : 27 Apr 2021 05:36 PM

கேத்ரீனாவுக்கு கரோனா: விஜய் சேதுபதியின் இந்திப் பட ஷூட்டிங் ஒத்திவைப்பு

'அந்தாதூன்' இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் உருவாகவிருந்த படத்தின் படப்பிடிப்பு காலைவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. படத்தின் நாயகி கேத்ரீனா கைஃபுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதே இதற்குக் காரணம்.

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அந்தாதூன்'. 2018-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், 3 தேசிய விருதுகளையும் தட்டிச் சென்றது. இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரீமேக்கும் செய்யப்பட்டு வருகிறது.

ஸ்ரீராம் ராகவனின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க கேத்ரீனா கைஃப் நாயகியாக நடிக்கிறார். இப்படத்துக்கு ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 15ஆம் தேதியிலிருந்து இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படத் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், அன்றைய தினத்தில் ஆரம்பிக்கப்படவில்லை. கேத்ரீனா கைஃபுக்கு படப்பிடிப்புக்கு முன்பே தொற்று இருப்பது தெரியவந்துள்ளதால் அன்று படப்பிடிப்பு நடக்கவில்லை என்றும், தற்போதைய சூழலில் படப்பிடிப்பைத் தொடங்குவது அவ்வளவு சரியாக இருக்காது என்பதால் காலவரையின்றி படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

'மாநகரம்' திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். அமேசான் வெப் சீரிஸுக்கான படப்பிடிப்பிலும் விஜய் சேதுபதி கலந்துகொள்ள வேண்டியிருந்தது. கரோனா நெருக்கடியால் அந்தப் படப்பிடிப்பும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x