Published : 22 Apr 2021 02:50 PM
Last Updated : 22 Apr 2021 02:50 PM

'இந்தியன் - 2' விவகாரம்; லைகா, இயக்குநர் ஷங்கர் கலந்து பேசி தீர்வு காண உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

'இந்தியன் - 2' படப் பிரச்சினை தொடர்பாக, தயாரிப்பு நிறுவனமான லைகா மற்றும் இயக்குநர் ஷங்கர் தரப்பினர் கலந்து பேசி, சுமுகத் தீர்வு காண, இரு தரப்பினருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

'இந்தியன் - 2' படத்தை முழுமையாக முடித்துக் கொடுக்காமல் இயக்குநர் ஷங்கர் பிற படங்களை இயக்கத் தடை விதிக்கக் கோரி லைகா நிறுவனம் சார்பில் மேல் முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு இன்று (ஏப்.22) விசாரணைக்கு வந்தது.

அப்போது, இயக்குநர் ஷங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2022-ம் ஆண்டு மே மாதம் முதல் ராம்சரண் நடிக்கும் தெலுங்குப் படத்தை இயக்குநர் ஷங்கர் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், வரும் ஜூன் மாதம் முதல் அக்டோபர் வரையிலான ஐந்து மாதங்களில் படத்தை முடித்துக் கொடுத்துவிடுவார் எனவும் தெரிவித்தார்.

தயாரிப்பு நிறுவனம் ஷங்கருக்கு எதிராகக் கடுமையான குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளதாகவும், அவற்றைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்திய ஷங்கர் தரப்பு வழக்கறிஞர், நடிகர் விவேக் இறந்துவிட்டதால் அவர் நடித்த பகுதியை மீண்டும் எடுக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த விவரங்களை மறைத்து இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார்.

லைகா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இயக்குநர் ஷங்கருக்கு ஏற்கெனவே 32 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதித் தொகையை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். கடந்த மார்ச் மாதத்துக்குள் படத்தை முடிக்கத் திட்டமிடப்பட்ட நிலையில், இன்னும் படத்தை முடிக்காததால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், பழைய விஷயங்களை மறந்து எதிர்காலத்தைக் கருத்தில் கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவு என்பது சுமுகத் தீர்வை ஏற்படுத்தாது எனத் தெரிவித்த நீதிபதிகள், இரு தரப்பினரும் கலந்து பேசி சுமுகத் தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தி, விசாரணையை ஏப்ரல் 28-ம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x