Published : 19 Apr 2021 03:20 PM
Last Updated : 19 Apr 2021 03:20 PM

கரோனா கட்டுப்பாடுகள் எதிரொலி: தள்ளிப்போன 'எம்.ஜி.ஆர் மகன்' ரிலீஸ்

தமிழகத்தில் கரோனா இரண்டாவது அலை தீவிரமாகிவருவதை அடுத்து எம்.ஜி.ஆர் மகன் திரைப்படம் ஏப்ரல் 23 அன்று வெளியாகாது என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார், சத்யராஜ், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், மிருணாளினி ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எம்ஜிஆர் மகன்'. ஏப்ரல் 23-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது கரோனா தொற்றுப் பரவல் அதிகமாகிவருவதைத் தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. திரையரங்குகளில் 50 சதவித இருக்கை மட்டுமே நிரப்பலாம், இரவுக் காட்சி ரத்து, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரங்கு என புதிய உத்தரவுகள் அமலில் உள்ளன. இதனை மனதில் கொண்டு படத்தின் வெளியீடை ஒத்தி வைப்பதாக தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கையில், "எம்.ஜி.ஆர் மகன் திரைப்படத்தின் தொடக்கத்திலிருந்தே, நீங்கள் அனைவரும் உங்கள் முழு ஆதரவை வழங்கி வருகிறீர்கள். எம்.ஜி.ஆர் மகன் திரைப்படம் ஏப்ரல் 23 அன்று வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால் எங்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. இத்திரைப்படத்தில் பணியாற்றிய பல்வேறு தொழில்நுட்பக்கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் கடின உழைப்பு, சரியான முறையில் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலும், மற்றும் விநியோகஸ்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, எங்கள் எம்.ஜி.ஆர் மகன் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை ஒத்தி வைக்க முடிவு எடுத்திருக்கிறோம்.

தமிழ்நாடு முழுவதும் விநியோகஸ்தர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னர், சூழல் மிகவும் உகந்ததாக மாறும் பட்சத்தில் எம்.ஜி.ஆர் மகன் திரைப்படத்தை பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம். அனைவரும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள். மிக விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம், நன்றி" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x