Published : 18 Apr 2021 11:53 AM
Last Updated : 18 Apr 2021 11:53 AM

விவேக்கின் அன்பை இன்னொரு ரசிகரிடம் பார்க்க முடியுமா எனத் தெரியவில்லை: இளையராஜா உருக்கம்

விவேக்கின் அன்பையும், அபிமானத்தையும் இன்னொரு ரசிகரிடம் பார்க்க முடியுமா என்று தெரியவில்லை என்று இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ளார்.

நகைச்சுவை நடிகரும், தமிழில் ஏராளமான படங்களில் நடித்தவரும், சின்னக் கலைவாணர் என்று புகழப்பட்டவருமான நடிகர் விவேக் (59) நேற்று முன்தினம் மாரடைப்பு ஏற்பட்டதால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று (ஏப்ரல் 17) காலை உயிரிழந்தார்.

அவருடைய மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தார்கள். மேலும், பல்வேறு திரையுலக பிரபலங்கள் நேரிலும் விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

விவேக்கின் மறைவுக்கு இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"விவேக்கின் மறைவு என்னை மிகவும் துக்கத்தில் ஆழ்த்திவிட்டது. அதிலிருந்து மீண்டு வரமுடியாமல் காலையிலிருந்து, இப்போது வரை அந்த துக்கத்திலேயே என் மனது இருந்தது. காரணம், நடிகர் விவேக் அவர்கள் என் மீது மிகுந்த மரியாதையையும், அன்பும், அளவற்ற அபிமானமும் வைத்திருந்த ஒரு நபர். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்த காலத்திலிருந்தே அவர் என்னுடைய ரசிகராக இருந்திருக்கிறார். பின்னால், அபிமானியாக மாறி, பக்தராக மாறக்கூடிய அளவுக்கு விவேக் என்னை நேசித்திருக்கிறார்.

சமீபத்தில் கூட என்னை வந்து பார்த்துவிட்டுச் சென்றார். தான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை எப்போது சந்தித்தாலும் சொல்வார். நான் கேட்டுவிட்டு அவரை ஊக்கப்படுத்துவேன். அவருக்கு எனக்குத் தெரிந்த யுக்திகளையும் சொல்வது வழக்கம். சமீபத்தில் என்னை ஸ்டுடியோவில் சந்தித்துப் பேசிவிட்டு, சில வேலைகளுக்கு என்னிடம் அனுமதியும் கேட்டுவிட்டுச் சென்றார். அவருடைய அன்பையும், அபிமானத்தையும் இன்னொரு ரசிகரிடம் நான் பார்க்க முடியுமா என்று தெரியவில்லை.

எல்லோரும் அவருடைய மறைவில் துக்கப்பட்டு இருப்பீர்கள். உங்களுடைய துக்கத்தில் நான் பங்கேற்க முடியாது. என்னுடைய துக்கத்தில் நீங்களும் பங்கெடுக்க முடியாது. அவர் அவர்கள் துக்கம் அவர் அவர்களுக்குத் தான். விவேக்கின் குடும்பமே என் மீது பாசமும், நேசமும், அன்பும் வைத்திருக்கூடிய ஒரு அற்புதமான குடும்பமாகும்.

அவருடைய மறைவு அவரது குடும்பத்துக்கு அளவற்ற துக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். அந்தத் துக்கத்திலிருந்து அவருடைய குடும்பத்தினர் மீண்டும் வர இறைவனைப் பிரார்த்திக்கிறேன். விவேக்கின் ஆத்மா சாந்தியடையவும், குடும்பம் துக்கத்திலிருந்து வெளிவரவும் இறைவனுடைய அருள் வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்”

இவ்வாறு இளையராஜா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x