Published : 16 Apr 2021 11:52 AM
Last Updated : 16 Apr 2021 11:52 AM

சினிமாவுக்கு என்றைக்குமே அழிவு கிடையாது: சசிகுமார்

சினிமாவுக்கு என்றைக்குமே அழிவு கிடையாது என்று சசிகுமார் பேசியுள்ளார்.

பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார், சத்யராஜ், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், மிருணாளினி ரவி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எம்ஜிஆர் மகன்'. ஏப்ரல் 23-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் சத்யராஜ், சமுத்திரக்கனி தவிர்த்து படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

இதில் சசிகுமார் பேசியதாவது:

''இந்தப் படத்தில் நானும் சமுத்திரக்கனியும் நடிக்கிறோம் என்றதுமே எங்களின் வழக்கமான படம் போலத்தான் இருக்கும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால், பொன்ராம் எங்களிடம் கதையைச் சொன்னபோது அது எங்களுக்கு மிகவும் புதிதாக இருந்தது. என்ன புதிது என்றால் எல்லாப் படங்களிலும் நானும் கனியும்தான் எல்லாருக்கும் அறிவுரை கூறுவோம். இந்தப் படத்தில் ஊரே எங்களுக்கு அறிவுரை கூறுகிறது.

பொன்ராமிடம் பணிபுரியும் உதவி இயக்குநர்கள் கொடுத்து வைத்தவர்கள். அவருக்குக் கோபமே வராது. அவரது படத்தைப் போலவே அவருடைய படப்பிடிப்புத் தளமும் ஜாலியாக இருக்கும். இந்தப் படத்தில் சத்யராஜ் எனக்கு அப்பாவாக நடித்திருக்கிறார். படத்தின் தலைப்பில் சசிகுமார் - சத்யராஜ் என்று போடும்போது கூட பொன்ராமிடம் சத்யராஜ் - சசிகுமார் என்று போடுங்கள், அதுதான் சரியாக இருக்கும் என்று சொன்னேன்.

அந்தோணி தாசன் இசையமைப்பாளராக ஆனதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. 'தாரை தப்பட்டை' படத்தில் நானும் அவரும் நடித்திருந்தோம். ஒரு நாட்டுப்புறக் கலைஞன் வளர்வதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. எத்தனை தடைகள் வந்தாலும் அதையெல்லாம் தாண்டிதான் சினிமா ஜெயிக்கும். சினிமாவுக்கு என்றைக்குமே அழிவு கிடையாது. எத்தனைவிதமான தொழில்நுட்பங்கள் வந்தாலும் சினிமா ஓடிக்கொண்டுதான் இருக்கும்''.

இவ்வாறு சசிகுமார் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x