Published : 15 Apr 2021 01:00 PM
Last Updated : 15 Apr 2021 01:00 PM

'கர்ணன்' படத்தில் செய்த திருத்தம்: உதயநிதி கருத்து

'கர்ணன்' படக்குழுவினர் செய்துள்ள மாற்றத்தை முன்வைத்து உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'கர்ணன்'. தாணு தயாரிப்பில் வெளியாகியுள்ள இந்தப் படத்துக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
ஏப்ரல் 9-ம் தேதி வெளியான இந்தப் படம், தனுஷ் நடிப்பில் வெளியான படங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளது. ஏப்ரல் 10-ம் தேதி முதல் திரையரங்குகளில் 50% இருக்கைக்குத்தான் அனுமதி என்றாலும், தொடர்ச்சியாக நல்ல வசூல் செய்து வருகிறது.

இந்தப் படம் கொடியங்குளம் கலவரத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தது. படத்தில் கொடியங்குளம் என்பது பொடியங்குளம் என்று மாற்றப்பட்டிருந்தது. மேலும் படத்தின் சம்பவங்கள் 1997க்கு முன் நடந்ததாகச் சித்தரிக்கப்பட்டிருந்தது. அதிமுக ஆட்சியில் நடந்த சம்பவத்தை ஏன் திமுக ஆட்சியில் நடைபெற்றதாகச் சொல்லப்பட்டுள்ளது எனப் பலரும் கேள்வி எழுப்பினார்கள்.

இது தொடர்பாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட வேண்டுகோளை முன்வைத்து படத்தில் திருத்தம் செய்யப்பட்டது. இதை முன்வைத்து சமூக வலைதளத்தில் பெரும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

தற்போது இந்த மாற்றம் தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"கர்ணன் தவிர்க்க முடியாத திரைப்படம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 1995-ல் நடந்த கொடியங்குளம் கலவரம் 1997-ல் நடந்ததாகக் காட்டப்பட்டிருந்ததை தயாரிப்பாளர் - இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அவர்களும் அதனைத் திருத்திக் கொள்வதாக உறுதியளித்து அதை இன்று செய்துள்ளனர்.

படைப்பிலுள்ள பிழையைச் சுட்டிக்காட்டுகையில் அதைத் திருத்திக் கொள்வது வரவேற்புக்குரியது. கொடியங்குளம் கலவரம் 1995-ல் அதிமுக ஆட்சியில் நடந்ததை அனைவரும் அறிவர். அதற்கு ஏராளமான சான்றுகளும் உள்ளன. எனினும் '90-களின் இறுதியில்' எனத் திருத்தப்பட்டு வருவதை முன்வைத்தும் அதிருப்தி குரல்கள் எழுகின்றன.

ஒடுக்கப்பட்ட மக்களின் மேன்மைக்கான கலைஞரின் பங்களிப்புகள் காலத்தால் அழியாதவை. அதை யாராலும் மறுக்கவோ-மறைக்கவோ முடியாது. எனவே, இந்த விஷயத்தை இத்துடன் விடுத்து ஆக்கபூர்வமான பணிகளில் கவனம் செலுத்துவோம். 'கர்ணன்' படக்குழுவுக்கு மீண்டும் என் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்".

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x