Published : 13 Apr 2021 10:17 AM
Last Updated : 13 Apr 2021 10:17 AM

கரோனா அச்சுறுத்தல்: 'டக் ஜெகதீஷ்' வெளியீடு தள்ளிவைப்பு

நானி - சிவா நிர்வானா கூட்டணியில் உருவாகியுள்ள 'டக் ஜெகதீஷ்' படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நானி - சிவா நிர்வானா கூட்டணியில் வெளியான படம் 'நின்னு கோரி'. நிவேதா தாமஸ், ஆதி உள்ளிட்ட பலர் நானியுடன் நடித்த இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. 'நின்னு கோரி' படத்தைத் தொடர்ந்து சிவா நிர்வானா இயக்கத்தில் வெளியான 'மஜிலி' படமும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது மீண்டும் நானி நடித்துள்ள 'டக் ஜெகதீஷ்' படத்தை இயக்கி முடித்துள்ளார் சிவா நிர்வானா.

இதில் ரீத்து வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நானியுடன் நடித்து வருகிறார்கள். சாஹூ மற்றும் ஹரிஷ் இருவரும் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு தமன் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். வரும் ஏப்ரல் 23 அன்று 'டக் ஜெகதீஷ்' திரைப்படம் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக 'டக் ஜெகதீஷ்' படம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடிகர் நானி தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் கூறியுள்ளதாவது:

'டக் ஜெகதீஷ்' படத்தின் ரீ-ரெகார்டிங் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளன. படமும் சிறப்பாக வந்துள்ளது. இப்படத்தை உங்களுக்கு திரையிட மிகுந்த ஆவலுடன் இருக்கிறோம். குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்த பார்த்து ரசிக்க வேண்டிய படம் இது. ஆனால் தற்போதைய சூழல் எங்களுக்கு சாதகமாக இல்லை. இந்த ஆண்டு வெளியான ‘க்ராக்’ முதல் ‘வக்கீல் சாப்’ வரை அனைத்து படங்களை நீங்கள் சூப்பர் ஹிட் ஆக்கியிருக்கிறீர்கள். சினிமாவையும், தெலுங்கு ரசிகர்களையும் பிரித்து பார்க்க முடியாது. உகாதி பண்டிகை அன்று 'டக் ஜெகதீஷ்' ட்ரெய்லர் வெளியாகாது. புதிய வெளியீட்டுத் தேதியுடன் ட்ரெய்லர் வெளியாகும். ஆம் ஏப்ரல் 23 அன்று வெளியாகவிருந்த 'டக் ஜெகதீஷ்' படம் தள்ளிவைக்கப்படுகிறது.

இவ்வாறு நானி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x