Published : 10 Apr 2021 09:18 PM
Last Updated : 10 Apr 2021 09:18 PM

இயக்குநராகப் பார்க்க முடியுமா? நடிகராகக் காணவே முடியாதா?- ஏ.ஆர்.ரஹ்மான் பதில் 

நிறைய தமிழ்க் கதைகள் தன்னிடம் உள்ளதாகவும், இயக்குநராகப் பல காலம் ஆகும் என்றும், நடித்தால் இன்னும் பிரபலமாகி விடுவேன் என்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் தயாரிப்பில் உருவாகியுள்ள இசையுடன் இணைந்த காதல் கதையான '99 சாங்ஸ்' திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கில் ஏப்ரல் 16 அன்று இந்தியா முழுவதும் வெளியாகிறது.

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் பேட்டி அளித்துள்ளார்.

இந்தப் படத்தின் மூலம் நிறைய அனுபவம் கிடைத்திருக்கும். விரைவில் இயக்குநர் ரஹ்மானைக் காண வாய்ப்பு உள்ளதா?

இயக்குநராகப் பல காலம் ஆகும். நிறைய விஷயங்களை மனதில் வைத்துப் படம் பண்ணுவதற்கு எனக்கு நேரம் இல்லை. ஆனால், படம் தயாரிக்க ஒரு குழுவை வைத்துக் கதை எழுதி, ஒரு இயக்குநரை வைத்துப் படம் எடுப்பது எனக்கு எளிதாக இருந்தது.

'99 சாங்ஸ்' படத்தைத் தொடர்ந்து கதை எழுதும் எண்ணம் உள்ளதா? ஏதேனும் எழுதி வைத்துள்ளீர்களா?

நிறைய கதைகளை எழுதி வைத்துள்ளேன். ஆனால், ஒன்றைச் செய்தால், அது ஒழுங்காகச் செய்ய வேண்டும் என்பது என் ஆசை. முதலில் இந்தப் படம் எப்படி மக்களைச் சென்றடைகிறது என்பதைப் பார்த்துவிட்டு, அதற்குப் பின் அடுத்த கட்டத்தைப் பற்றி யோசிப்பேன்.

ஒரு நேரடி தமிழ்ப் படத்துக்குக் கதை எழுதும் எண்ணம் இருக்கிறதா?

நிறைய தமிழ்க் கதைகள் என்னிடம் உள்ளன. இந்தப் படத்தின் வெற்றியைப் பொறுத்துதான் எல்லாமே.

ஒரு பாடலில் சில காட்சிகளில் தோன்றுகிறீர்கள். எங்களால் நடிகர் ஏ.ஆர்.ரஹ்மானைக் காணவே முடியாதா?

இல்லை. நான் என் சொந்த உலகில் இருக்க விரும்புகிறேன். நடித்தால் இன்னும் பிரபலமாகி விடுவேன். அதனால் அமைதியாக இசை, கதை எழுதவே விரும்புகிறேன்.

சமூக வலைதளத்தில் விமர்சனம் என்பது மிகவும் எளிமையாகிவிட்டது. இதைப் பற்றிய உங்களுடைய பார்வை என்ன?

விமர்சனம் வருவது தப்பே இல்லை. முதல் படத்திலிருந்தே எனக்கு விமர்சனம் பழகிவிட்டது. அதில் நல்ல விஷயங்களை நான் எடுத்துக் கொள்வேன். மற்ற விஷயங்களைத் தவிர்த்து விடுவேன். நாம் உண்மையாக உழைத்திருக்கிறோமா என்பதுதான் முக்கியம்.

இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் அளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x