Published : 07 Apr 2021 06:15 PM
Last Updated : 07 Apr 2021 06:15 PM

ப்ளூ சட்டை மாறனின் 'ஆன்டி இண்டியன்' படத்துக்குத் தடை: படக்குழுவினர் அதிர்ச்சி

சென்னை

ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஆன்டி இண்டியன்' படத்துக்குத் தணிக்கை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் யூடியூப் தளத்தில் பலரும் விமர்சகர்களாக வலம் வருகிறார்கள். இதில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர்கள் வெகு சிலர்தான். அதில் முக்கியமானவர் ப்ளூ சட்டை மாறன். இவர் அனைத்துப் பட விமர்சனங்களையும் ப்ளூ சட்டை அணிந்துகொண்டே செய்வதால், அவரை ப்ளூ சட்டை மாறன் என்றே அழைத்து வருகிறார்கள்.

அவர் இயக்குநராக ஒரு படத்தை இயக்கி முடித்துள்ளார். முழுக்க புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. அனைத்துப் பணிகளும் முடிந்து, தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு.

'ஆன்டி இண்டியன்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஏப்ரல் 5-ம் தேதி தணிக்கை அதிகாரிகள் பார்த்தனர். இந்தப் படத்தை முழுமையாக நிராகரித்து தடை விதித்துள்ளனர். அடிப்படையிலேயே சர்ச்சையான கதைக்களம் கொண்ட படங்களுக்கு இப்படி நிகழ்வது வழக்கம்.

மதம் சார்ந்த சமகாலப் பிரச்சினைகளையும், அரசியலையும் மையப்படுத்தி அழுத்தமாகவும், நையாண்டி பாணியிலும் எடுக்கப்பட்ட இப்படத்தைப் பார்த்த திரையுலக பிரபலங்கள் பலர் பாராட்டி இருந்தனர். ஆனால், அதற்கு தணிக்கை அதிகாரிகள் தடை விதித்திருப்பது படக்குழுவினரைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தத் தடை குறித்து தயாரிப்பாளர் ஆதம் பாவா, "தணிக்கை அதிகாரிகள் அவர்களுடைய முடிவைச் சொல்லியிருக்கிறார்கள். நாங்கள் மறுதணிக்கைக்கு மேல்முறையீடு செய்யவுள்ளோம். விரைவில் அனைத்துத் தடைகளும் நீங்கி 'ஆன்டி இண்டியன்' படம் வெளியாகும்" என்று நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x