Published : 06 Apr 2021 05:36 PM
Last Updated : 06 Apr 2021 05:36 PM

நடிகை கத்ரீனா கைஃபுக்கு கரோனா தொற்று: வீட்டுத் தனிமையில் சிகிச்சை

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

கரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாகத் தொற்று எண்ணிக்கை இந்தியா முழுவதும் வேகமாக அதிகரித்து வருகிறது. கரோனா தொற்றால் மும்பையில் வசித்து வரும் பல பாலிவுட் பிரபலங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ரன்பீர் கபூர், ஆலியா பட், ஆமிர் கான், கோவிந்தா, அக்‌ஷய் குமார் உள்ளிட்ட நடிகர்கள் கடந்த வாரங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

தற்போது நடிகை கத்ரீனா கைஃபுக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரி பிரிவில் கத்ரீனா பகிர்ந்துள்ளார். அதில், "எனக்கு கோவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. உடனடியாக என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். வீட்டுத் தனிமையில் இருக்கப் போகிறேன். எனது மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் அத்தனை பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றி வருகிறேன்.

என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் உடனடியாகத் தங்களைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்கள் அத்தனை பேரின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள். உங்களை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று கத்ரீனா குறிப்பிட்டுள்ளார்.

திங்கட்கிழமை அன்று தான் கத்ரீனாவின் காதலர் என்று சொல்லப்படும் சக நடிகர் விக்கி கௌஷலும், தனக்கு கரோனா தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x