Published : 24 Mar 2021 06:04 PM
Last Updated : 24 Mar 2021 06:04 PM

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்?

சென்னை

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக வெளியான செய்தி வதந்தியே என்று தெரியவந்துள்ளது.

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சூரி, முனீஸ்காந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'டான்'. இந்தப் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது.

இந்தப் படத்துக்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. 'காப்பான்' படத்துக்குப் பிறகுத் தனது அடுத்த படத்துக்கான கதையை எழுதி வருகிறார் கே.வி.ஆனந்த். ஆகையால் கே.வி.ஆனந்த் - சிவகார்த்திகேயன் இணையும் செய்தி உண்மையாக இருக்க வாய்ப்புகள் அதிகம் எனக் கருதப்பட்டது.

இது தொடர்பாக விசாரித்தபோது, "தனது அடுத்த படத்துக்கான கதையை இன்னும் கே.வி.ஆனந்த் முழுமையாக முடிக்கவில்லை. அந்தக் கதையில் சிவகார்த்திகேயன் நடிக்கவில்லை. மேலும், கதையை முழுமையாக முடித்துவிட்டுத்தான் நடிகர்களை அணுகுவதை வழக்கமாக வைத்திருப்பவர் கே.வி.ஆனந்த்" என்று தெரிவித்தார்கள்.

இதன் மூலம் கே.வி.ஆனந்த் - சிவகார்த்திகேயன் இணைந்து படம் பண்ணவுள்ளார்கள் என்ற செய்தி வதந்தி என்பது உறுதியாகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x