‘தனுஷ் சிவசாமியாகவே வாழ்ந்தார்.. அவரது அர்ப்பணிப்பு அளப்பரியது’ - கலைப்புலி தாணு நெகிழ்ச்சி

‘தனுஷ் சிவசாமியாகவே வாழ்ந்தார்.. அவரது அர்ப்பணிப்பு அளப்பரியது’ - கலைப்புலி தாணு நெகிழ்ச்சி
Updated on
1 min read

67வது தேசிய விருதுகள் திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டன. இதில் சிறந்த மாநில மொழித் திரைப்படமாகத் தமிழில் அசுரன் தேர்வானது. படத்தின் நாயகன் தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார். ஆடுகளம் படத்துக்குப் பிறகு அவர் வெல்லும் இரண்டாவது தேசிய விருது இது.

இந்நிலையில் ‘அசுரன்’ படத்துக்கு தேசிய விருது கிடைத்தது குறித்து அப்படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி தாணு தனது கருத்துக்குளை பகிர்ந்துள்ளார். தனியார் செய்தி ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

1992ஆம் ஆண்டு வண்ண வண்ணப் பூக்கள் படத்துக்காக இயக்குநர் பாலு மகேந்திரா எனக்கு தேசிய விருது வாங்கித் தந்தார். அதன் நீட்சியாக, அவருடைய தலையாய தலைமகன், அவருடைய வழித்தோன்றல் வெற்றிமாறன் 2019ஆம் ஆண்டுக்கான தேசிய விருதை எனக்கு பெற்றுத் தந்திருக்கிறார். அவை இரண்டையும் நான் இரண்டு கண்களாக மதித்து போற்றுகிறேன். தனுஷுக்கும், வெற்றிமாறனுக்கும் இது சாதாரண உழைப்பல்ல.

சிக்குன் குனியா நோயால் அவர் படுக்கையில் இருந்தபோது கூட எடிட்டிங், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை பார்த்தது கண்டு என் கண்கள் கலங்கின. அதற்கான கவுரவம் இன்று அவருக்கு கிடைத்திருக்கிறது. இந்த விருதை நான் வெற்றிமாறனுக்கும், தனுஷுக்கும் சமர்ப்பிக்கிறேன். தனுஷ் இப்படத்தில் சிவசாமியாகவே வாழ்ந்தார். அதற்காக அவர் செய்த அர்ப்பணிப்பு அளவிட முடியாதது.

இவ்வாறு தாணு கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in