Published : 23 Mar 2021 11:27 AM
Last Updated : 23 Mar 2021 11:27 AM

‘ஒத்த செருப்பு’ படத்துக்கு எந்த பிரிவில் விருது கொடுப்பது என்றே தெரியவில்லை - கங்கை அமரன் பகிர்வு

நேற்று (22.03.21) 67-வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான விருதுகள் இவை. கரோனா நெருக்கடியால் கிட்டத்தட்ட ஒரு வருடம் தாமதமாக இந்த விருதுகள் அறிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. புதுடெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் இவ்விருதுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் ‘அசுரன்’ படத்துக்காக சிறந்த நடிகராக தனுஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிறந்த தமிழ்த் திரைப்படமாகவும் ‘அசுரன்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பார்த்திபன் இயக்கத்தில் உருவான ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ திரைப்படத்துக்கு சிறப்பு நடுவர் தேர்வு விருது அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சிறந்த ஒலியமைப்புக்காக ரசுல் பூக்குட்டி விருது பெற்றுள்ளார்.

இந்நிலையில் தமிழுக்கு ஏழு விருதுகள் கிடைத்துள்ளது குறித்து விருதுக் குழுவில் ஒருவரான கங்கை அமரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த 1 மாத காலமாக இதுவரை 106 படங்கள் பார்த்துள்ளோம். ஒரு நாளைக்கு நான்கு, ஐந்து படங்கள் பார்த்தோம். இதில் படங்களை தேர்வு செய்வதுதான் உண்மையில் கடினமான காரியம். பல புதிய மொழித் திரைப்படங்கள் வந்துள்ளன.

புதியவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்பதற்காக பல விஷயங்களை விட்டுக் கொடுத்தோம். தமிழில் இந்த ஆண்டு ஏழு விருதுகள் கிடைத்துள்ளன. இந்த முறை எனக்கு மிகவும் திருப்திகரமாக இருந்தது. எதற்காகவும் போராடவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஒத்த செருப்பு படத்தை பொருத்த வரைக்கும் எந்த பிரிவில் விருது கொடுப்பது என்றே தெரியவில்லை. இயக்கம், திரைக்கதை, வசனம் என அனைத்தையும் அவரே செய்துவிட்டார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x