Published : 22 Mar 2021 05:44 PM
Last Updated : 22 Mar 2021 05:44 PM

நடிகர் தீப்பெட்டி கணேசன் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி

வறுமையின் காரணமாக நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த நடிகர் தீப்பெட்டி கணேசனின் உடலுக்கு திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்தவர் நடிகர் தீப்பெட்டி கணேசன். இவருக்கு மனைவி மற்றும் இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர், சினிமாவில் ரேணிகுண்டா படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின், விஜய் சேதுபதியுடன் தென்மேற்கு பருவக்காற்று, அஜித்துடன் பில்லா-2, கோலமாவு கோகிலா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இயக்குநர் சீனு ராமசாமி இயக்கி உதயநிதி ஸ்டாலின் நடித்த கண்ணே கலைமானே படத்தில் நடித்திருந்தார்.

சமீப காலமாகவே இவருக்கு பட வாய்ப்புகள் இல்லை. வருமானம் இல்லாமல் குடும்பத்தை நடத்த முடியாமல் சிரமப்பட்டுள்ளார். கரோனா ஊரடங்கால் முற்றிலும் வீட்டில் முடங்கிய நிலையில் இவர், ‘‘தன்னுடைய குழந்தைகளுக்கு பால் வாங்க கூட பணமில்லாமல் வறுமையில் வாடுகிறேன், ’’ என்று திரையுலகத்தினரிடம் உதவி கேட்டு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோ வைரலானதும், நடிகர் லாரன்ஸ், அவருக்கு உதவி செய்து அவரது குழந்தைகள் படிப்பிற்கு உதவுவதாக உறுதியளித்தார்.

மேலும், பல நடிகர்கள், துணை நடிகர்கள் அவருக்கு உதவினர். கரோனா முடிந்தபிறகும் பட வாய்ப்புகள் வராததால் பரோட்டா கடையில் வேலைப்பார்த்து வந்தார். வறுமையால் மிகுந்த மன உளச்சலில் இருந்தார். அதனாலேயே இவரது உடல் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பனமில்லாமல் அவரது குடும்பத்தினர் தவித்துள்ளனர். அதனால், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு இறந்தார்.

திரைத்துறையைச் சேர்ந்த ஒருவர் வறுமையால் மரணமடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதற்கிடையில் மதுரைக்கு தேர்தல் பிரச்சாரத்துக்காக வந்த உதயநிதி ஸ்டாலின், தீப்பெட்டி கணேசம் மறைவுத் தகவல் அறிந்ததும் மதுரை நேரடியாக ஜெய்ஹிந்த்புரத்தில் தீப்பெட்டி கணேசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அவருடன் மதுரை மேற்குத் தொகுதி திமுக வேட்பாளர் சின்னம்மாளும் இருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x