Published : 21 Mar 2021 12:23 PM
Last Updated : 21 Mar 2021 12:23 PM

வெங்கட் பிரபு திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்: 'ஜாதி ரத்னாலு' இயக்குநர் பகிர்வு

வெங்கட் பிரபு உள்ளிட்ட இயக்குநர்களின் திரைப்படங்கள் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும், ஒருவகையில் தனது எழுத்தில் அவர்களின் தாக்கம் இருக்கிறது என்றும் 'ஜாதி ரத்னாலு' திரைப்பட இயக்குநர் அனுதீப் கூறியுள்ளார்.

'மஹாநடி' திரைப்படத்தின் இயக்குநர் நாக் அஷ்வின் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் உருவான தெலுங்குத் திரைப்படம் 'ஜாதி ரத்னாலு'. முழு நீள நகைச்சுவைத் திரைப்படமான இதில் நவீன் போலிஷெட்டி, ப்ரியதர்ஷினி, ராகுல் ராமகிருஷ்ணா உள்ளிட்டோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மார்ச் 11 அன்று வெளியான இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.

படத்தின் இயக்குநர் அனுதீப் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் இதுகுறித்துப் பகிர்ந்துள்ளார்.

"சார்லி சாப்ளின், வெங்கட் பிரபு, ஹாங்காங் இயக்குநர் ஸ்டீஃபன் சௌ உள்ளிட்டவர்களின் திரைப்படங்கள் எனக்குப் பிடிக்கும். 'ஷாலின் ஸாக்கர்', 'கங்க் ஃபூ ஹஸுல்' திரைப்படங்களைப் பார்த்தபோது எனக்கும் தற்காப்புக் கலை சார்ந்த நகைச்சுவைப் படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை வந்தது.

'ஜாதி ரத்னாலு' திரைப்படத்துக்கு எனக்கு மிகப்பெரிய தாக்கம், 'அந்தாஸ் அப்னா அப்னா' திரைப்படம்தன். நாங்கள் அனைவரும் அந்தப் படத்தின் ரசிகர்கள். அகம்பாவம் இல்லாத, கோபம் இல்லாத கதாபாத்திரங்கள், நகைச்சுவையாக இருக்கும் வில்லன்கள் என ஒரு விளையாட்டான உலகத்தை நாங்கள் உருவாக்க விரும்பினோம். அதுதான் இந்தப் படம்" என்று அனுதீப் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x