ஸ்பெயின் நாட்டில் படப்பிடிப்பு: 'வலிமை' வில்லன் சொன்ன அப்டேட்

ஸ்பெயின் நாட்டில் படப்பிடிப்பு: 'வலிமை' வில்லன் சொன்ன அப்டேட்

Published on

'வலிமை' படப்பிடிப்பு இன்னும் 3 நாட்கள் மட்டுமே மீதமிருப்பதாக படத்தில் வில்லனாக நடித்திருக்கும் கார்த்திகேயா கூறியுள்ளார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித், ஹ்யூமா குரேஷி நடித்து வரும் படம் 'வலிமை'. போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தியாவில் படமாக்க வேண்டிய காட்சிகளின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிந்தது.

தற்போது அந்தக் காட்சிகளுக்கான இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இறுதியாக, சண்டைக் காட்சி ஒன்றை வெளிநாட்டில் படமாக்கப் படக்குழு பயணிக்கவுள்ளதாகக் கூறப்பட்டது. தற்போது இதுகுறித்துத் தெளிவான தகவலை படத்தில் வில்லனாக நடிக்கும் கார்த்திகேயா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

"நான் சந்தித்ததிலேயே மிகவும் எளிமையானவர் அஜித். அவருடன் 'வலிமை'யில் நடித்திருந்தது அற்புதமான அனுபவமாக இருந்தது. இன்னும் ஒரு துரத்தல் காட்சியை ஸ்பெயின் நாட்டில் படம் பிடிக்கவுள்ளோம். ஸ்பெயின் அரசின் அனுமதிக்காகக் காத்திருக்கிறோம்" என்று கார்த்திகேயா கூறியுள்ளார்.

இந்தப் படப்பிடிப்பு 3 நாட்கள் என்றும், இது முடிந்தால் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்றும் தெரிகிறது.

முன்னதாக, மே 1-ம் தேதி 'வலிமை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் எனவும், அன்று முதல் விளம்பரப்படுத்தும் பணிகளும் தொடங்கும் என்றும் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in