Published : 17 Mar 2021 08:43 PM
Last Updated : 17 Mar 2021 08:43 PM

ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகும் ரஜினி

சென்னை

ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்துக்கு 'ரஜினி' எனப் பெயரிட்டுள்ளது படக்குழு.

'மகாபிரபு' 'பகவதி', 'குத்து', 'ஏய்', 'வாத்தியார்' உள்ளிட்ட பல்வேறு கமர்ஷியல் படங்களை இயக்கியவர் ஏ.வெங்கடேஷ். அர்ஜுன் நடிப்பில் வெளியான 'வாத்தியார்' படத்தைத் தயாரித்த நிறுவனம் வைத்தியநாதன் பிலிம் கார்டன். தற்போது அந்நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார் ஏ.வெங்கடேஷ்.

'ரஜினி' என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய் சத்யா நாயகனாக நடிக்கவுள்ளார். நாயகியாக கைநாட் அரோரா நடிக்கவுள்ளார். இதர நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒளிப்பதிவாளராக மனோ வி.நாராயணன், இசையமைப்பாளராக அம்ரிஷ், கலை இயக்குநராக ஏ.பழனிவேல் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

'ரஜினி' படத்தின் கதைக்களம் மற்றும் பெயர்க் காரணம் குறித்து ஏ.வெங்கடேஷ் கூறியதாவது:

"த்ரில்லர், ஆக்‌ஷன் கலந்த ஒரு வித்தியாசமான படமாக இதை உருவாக்க உள்ளேன். படத்தின் நாயகன் ரஜினி எதிர்பாராத விதமாக ஒரு நாள் இரவில் ஒரு விபத்தால் பல சிக்கல்களைச் சந்திக்கிறார். அவை என்ன மாதிரியான சிக்கல்கள், அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் படத்தின் திரைக்கதை. அவருடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நாய் ஒன்றும் நடிக்கிறது.

படத்தில் நாயகனின் பெயர் ரஜினி பிரியன். அவரை நண்பர்கள் செல்லமாக ரஜினி என்று அழைப்பார்கள் அதனால்தான் படத்திற்கு 'ரஜினி' என்று பெயர் வைத்துள்ளேன்".

இவ்வாறு ஏ.வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. சென்னை மற்றும் புதுச்சேரியில் முழுப் படப்பிடிப்பையும் முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x