Published : 16 Mar 2021 05:26 PM
Last Updated : 16 Mar 2021 05:26 PM

தடகள வீராங்கனை சாந்தியின் வாழ்க்கை படமாகிறது

சென்னை

தடகள வீராங்கனை சாந்தி செளந்தரராஜனின் வாழ்க்கைக் கதையைப் படமாக்கவுள்ளனர்.

கடந்த ஆண்டு மம்மூட்டி நடிப்பில் வெளியான 'மாமாங்கம்' படத்தில் மனோஜ் பிள்ளையிடம் அசோசியேட் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தவர் ஜெயசீலன் தவப்புதல்வி. இவர் தற்போது புதிய படமொன்றுக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார். 888 புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கவுள்ளது.

'சாந்தி செளந்தரராஜன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் மூலமாக தயாரிப்புத் துறையில் களம் காண்கிறது. இதற்கு முன்பாக பல்வேறு படங்களை விநியோகம் செய்துள்ளது 888 புரொடக்‌ஷன்ஸ். இந்தப் படம் தடகள வீராங்கனை சாந்தி செளந்தரராஜனின் வாழ்க்கையைத் தழுவி எழுதப்பட்டதாகும்.

இந்தியாவிற்கு 12 சர்வதேசப் பதக்கங்களையும், தன் சொந்த மாநிலமான தமிழகத்திற்கு 50 பதக்கங்களுக்கு மேல் வென்று கொடுத்தவர் தடகள வீராங்கனை சாந்தி செளந்தரராஜன். ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் தமிழ்ப் பெண் சாந்தி செளந்தரராஜன். 2006 ஆசிய விளையாட்டுப் போட்டியில் நடத்தப்பட்ட பாலினச் சோதனை அறிக்கையின் அடிப்படையில், பெண்களுக்கான போட்டியில் தகுதி மறுக்கப்பட்டு அவர் வென்ற வெள்ளிப் பதக்கம் அவரிடமிருந்து திரும்பப் பெறப்பட்டது.

இந்த அவமானகரமான சோதனையின் காரணமாக சாந்தி செளந்தரராஜன் தடகளப் போட்டிகளில் இருந்து நிரந்தரமாக வெளியேற்றப்பட்டார். அவர் வாழ்க்கையில் நடந்த, இதுவரை வெளிவராத பல சுவாரஸ்யமான சம்பவங்கள் மற்றும் திருப்பங்களுடன் இந்தக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக சாந்தி செளந்தரராஜனிடம் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் சாந்தி செளந்தரராஜனின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு மூன்று பேரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தமிழ்ப் புத்தாண்டு அன்று படத்தின் நாயகி குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. முதற்கட்டப் படப்பிடிப்பு, புதுக்கோட்டை அருகே உள்ள சாந்தி செளந்தரராஜனின் கிராமத்தில் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து பஞ்சாப், கத்தார், ஓமன் போன்ற இடங்களில் நடைபெற உள்ளது.

இசையமைப்பாளராக ஜிப்ரான், ஒலி வடிவமைப்பாளராக ரசூல் பூக்குட்டி, பாடலாசிரியராக யுகபாரதி, வசன கர்த்தாவாக பொன்.பார்த்திபன், ஒளிப்பதிவாளராக கோபிநாத் டி.தேவ் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். இந்தப் படம் தொடர்பான அறிவிப்பை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர் தங்களுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டனர்.

— Manju Warrier (@ManjuWarrier4) March 15, 2021

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x