Published : 12 Mar 2021 05:16 PM
Last Updated : 12 Mar 2021 05:16 PM

முடிவுக்கு வந்த 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' டீஸர் சர்ச்சை

சென்னை

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' டீஸர் தொடர்பான சர்ச்சை முடிவுக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது.

எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், மகிழ் திருமேனி, விவேக், இயக்குநர் மோகன்ராஜா, கனிகா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் இசக்கி துரை இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார்.

இந்தப் படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், டீஸருக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நீண்ட பதிவொன்றை வெளியிட்டு இருந்தார் இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த். இந்தப் பதிவு பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

தற்போது, வெங்கட கிருஷ்ண ரோகாந்த் புதிய பதிவொன்றை வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவின் மூலம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' சர்ச்சை முடிவு வந்திருப்பதாகத் தெரிகிறது. இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:

"அன்பார்ந்த நண்பர்களுக்கு, முந்தைய பதிவில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' டீசர் வெளியானதைத் தொடர்ந்து என் மனவருத்தத்தையும், தயாரிப்பு தரப்பு கொடுக்கும் விளக்கத்தை அறிவிக்கிறேன் என்று பதிவிட்டிருந்தேன்.

அதை தொடர்ந்து, நான் பதிவிட்ட மறுநாளில் இருந்து என் முக நூல் பக்கத்தைப் பார்க்க முடியவில்லை என்று சிலர் கூற ஆரம்பித்தார்கள். மறு நாள் இந்த எண்ணிக்கை கூடியது. அடுத்த நாள் என்னாலும் என் முக நூல் பக்கத்துக்குள் நுழைய முடியவில்லை. வெங்கட கிருஷ்ண ரோகாந்த் பெயரிலான கணக்கு முடக்கப்பட்டதாகக் காட்டியது. அதன் பின் நீண்ட நேரப் போராட்டத்திற்கு என முகநூல் பக்கம் மீட்கப்பட்டது.

ஆனால் அதில் எனது கடைசி பதிவான 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' டீசர் பதிவு நீக்கப்பட்டிருந்தது. அதற்கு முந்தைய எனது பதிவான ஜனா சாரின் 'லாபம்' ட்ரைலர் தான் எனது கடைசி அக்டிவிட்டியாக முகநூல் காட்டியது.

என்ன நடந்திருக்கும் என்று ஊகிக்கப் பெரிய துப்பறியும் அறிவு ஒன்றும் தேவைப்படாது தான். இருந்தாலும் ஊகங்களின் பின்னால் நான் செல்ல தயாராக இல்லை. அமைதியாக இருந்தேன். நேற்று, இந்த படம் உருவாக்கத்தில் இருந்து இன்று வரை இந்த படத்தின் முக்கிய காரணியாக இருக்கும் குமார் சார் போனில் பேசினார்.

சில அறிவுரைகள்... சில தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய விஷயங்கள்... அடுத்த செயல் திட்டங்கள் என்று எங்கள் உரையாடல் அடுத்த கட்டத்தை நோக்கி நகரத்தொடங்கி இருக்கிறது. சுமார் ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு அலுவலகம் செல்லப்போகிறேன்.

நல்லது. இனி நான் பேசப் போகும் விஷயம் தான் ரொம்ப முக்கியமானதாக நான் கருதுகிறேன். நான் அடிப்படையில் இயக்குநர் சங்க உறுப்பினர் இல்லை. பேராண்மையின் போது ஜனா சார் தற்காலிக உறுப்பினராக என்னைச் சேர்த்துவிட்ட போதும் அதைத் தொடராமல் விட்டதால் நான் இன்று இயக்குநர் சங்கத்தின் உறுப்பினர் இல்லை.

அதனாலேயே தவிர்க்க முடியாமல் இந்த விஷயத்தைப் பொதுவெளிக்குக் கொண்டு வரும்படியாகிவிட்டது. இது முற்றிலும் ஒரு தவறான முன்னுதாரணம் என்பதை திரைத்துறை முன்னால் ஒப்புக் கொள்கிறேன். என் படத்து டீசரை என் முகநூல் பக்கத்தில் வெளியிட முடியாமலே போய்விடுமோ என்கிற மன உளைச்சல் இருந்தது. இன்று நிலைமை மாறி இருக்கிறது.

20 லட்சத்தைத் தாண்டிய பார்வையாளர்கள், பாராட்டுகள், கருத்துகள், எதிர்கருத்துகள் என்று முன்னேறிப் போய்க் கொண்டிருக்கும் யாதும் ஊரே யாவரும் கேளிர் டீசரை எனது முக நூல் பக்கத்தில் பதிவிடுகிறேன். தாமதமாக இந்த டீசர் பதிவிடப்படுகிறது என்றாலும் ஒரு இயக்குநரின் தன்மானத்தோடு பதிவிடப்படுகிறது"

இவ்வாறு வெங்கட கிருஷ்ண ரோகாந்த் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x