Published : 09 Mar 2021 07:08 PM
Last Updated : 09 Mar 2021 07:08 PM

மீண்டும் இணைந்து வாழ விருப்பம்: விவாகரத்தைத் திரும்பப் பெற்ற நவாசுதின் சித்திக் மனைவி

விவாகரத்து கேட்டு வழக்குத் தொடர்ந்திருந்த நவாசுதின் சித்திக்கின் மனைவி ஆலியா அதைத் திரும்பப் பெற்றுள்ளார். மீண்டும் இணைந்து வாழ விரும்புவதாகக் கூறியுள்ளார்.

2009ஆம் ஆண்டு நவாசுதினும் ஆலியாவும் திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஆண்டு நவாசுதினிடமிருந்து விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடினார் அவரது மனைவி ஆலியா. கடந்த பத்து வருடங்களாகவே தங்களுக்குள் பிரச்சினை இருந்து வந்ததாக அப்போது அவர் கூறினார். தொடர்ந்து நவாசுதின் தன்னை சரியாக நடத்தவில்லை, தனக்குத் தர வேண்டிய பணத்தைத் தரவில்லை என்று குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதற்கு எதிராக நவாசுதினும் நோட்டீஸ் அனுப்பினார்.

ஆனால், தற்போது நவாசுதினுடன் மீண்டும் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்துள்ளார் ஆலியா. இதுகுறித்து ஒரு பேட்டியில், "எனக்குக் கரோனா பாதிப்பு ஏற்பட்டது. என்னை மட்டுமல்லாமல் குழந்தைகளையும் நவாசுதின் நன்றாகப் பார்த்துக் கொண்டார். அவரைப் பற்றி நான் தவறாகப் பேசியிருந்தும், எங்களுக்குள் இருந்த வேற்றுமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு என்னைப் பார்த்துக் கொண்டார். நான் மன அழுத்தத்தில் இருக்கும்போது எனக்கு என்றும் உதவியிருக்கிறார்.

இந்த நோய் தொற்றுக் காலம் என் கண்களைத் திறந்திருக்கிறது. எங்கள் குழந்தைகளின் நலனே முக்கியம் என்பதை நான் உணர்ந்துவிட்டேன். எங்கள் குழந்தைகளுக்கும் நாங்கள் தேவை. நாங்கள் சேர்ந்து வாழ்வதில் அவர்களுக்கு மகிழ்ச்சி என்றால் எங்கள் கருத்து வேறுபாடுகளை நாங்கள் புறம்தள்ள முடியும். விவாகரத்து கேட்டு நான் தொடர்ந்திருந்த வழக்கைத் திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டேன். இனி எனக்கு விவாகரத்து வேண்டாம். இந்தத் திருமண உறவுக்கு இன்னொரு வாய்ப்பைத் தர விரும்புகிறேன்" என்று ஆலியா பேசியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x