Published : 04 Mar 2021 08:03 PM
Last Updated : 04 Mar 2021 08:03 PM

'மரகத நாணயம்' இயக்குநரின் இயக்கத்தில் அதர்வா

ஏ.ஆர்.கே சரவணன் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக அதர்வா நடிப்பது உறுதியாகியுள்ளது.

ஏ.ஆர்.கே சரவணன் இயக்கத்தில் ஆதி, நிக்கி கல்ரானி, ஆனந்த்ராஜ், அருண்ராஜா காமராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மரகத நாணயம்'. 2017-ம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றது.

இதனைத் தொடர்ந்து ஏ.ஆர்.கே சரவணன் இயக்கவுள்ள அடுத்தப் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உண்டானது.

முதலில் ஏ.ஆர்.கே சரவணன் - அதர்வா கூட்டணி முடிவாகி, படத்தின் பணிகள் தொடங்கப்பட்டது. அந்தச் சமயத்தில் ஏற்பட்ட பைனான்ஸ் பிரச்சினையால் நீண்ட நாட்களாகப் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்து பின்பு கைவிடப்பட்டது.

அதற்குப் பிறகு ஏ.ஆர்.கே சரவணன் - ஆர்யா இருவரும் இணைந்து படம் பண்ணுவதற்குப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்தப் பேச்சுவார்த்தை அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை.

இந்நிலையில், தற்போது ஏ.ஆர்.கே சரவணனின் அடுத்த படம் முடிவாகிவிட்டது. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் நாயகனாக அதர்வா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

தற்போது அதர்வாவுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x