Published : 18 Feb 2021 12:11 PM
Last Updated : 18 Feb 2021 12:11 PM

மீண்டும் சூர்யாவுடன் இணையும் வடிவேலு?

சென்னை

சூர்யா நடிக்கவுள்ள புதிய படத்தில் வடிவேலு நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடிக்க தேதி ஒதுக்கியுள்ளார் சூர்யா. தற்போது கரோனாவிலிருந்து மீண்டு ஓய்வில் இருக்கும் சூர்யா, விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சத்யராஜ், சூரி, ப்ரியங்கா மோகன், திவ்யா பாரதி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடிக்கவுள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, கலை இயக்குநராக ஜாக்கி, இசையமைப்பாளராக தமன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். சமீபமாக இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் எனத் தகவல் பரவி வருகிறது.

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வடிவேலு கலந்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலானது நினைவு கூரத்தக்கது. இதனால் சூர்யாவுடன் நடிப்பது உண்மையாக இருக்கும் என்று பலரும் கருதினார்கள்.

இது தொடர்பாக விசாரித்த போது, "இந்த தகவலில் உண்மையில்லை. 'சூர்யா 40' படத்தில் சூர்யாவுடன் சூரி மட்டுமே காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்" என்று தெரிவித்தது படக்குழு. 'பிரெண்ட்ஸ்', 'வேல்', 'ஆறு' மற்றும் 'சில்லுனு ஒரு காதல்' ஆகிய படங்களில் சூர்யா - வடிவேலு இணைந்து நடித்துள்ளனர். அதற்குப் பிறகு இந்தக் கூட்டணி இணைந்து நடிக்கவில்லை.

அதே போல் வடிவேலுவும் இறுதியாக விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு வேறு எந்தவொரு புதிய படத்திலும் ஒப்பந்தமாகாமல் உள்ளார். இதற்கு 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படத்தின் பிரச்சினை இன்னும் முடிவடையாதது தான் காரணம் எனக் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x