Published : 17 Feb 2021 04:12 PM
Last Updated : 17 Feb 2021 04:12 PM

'ஆர்.ஆர்.ஆர்' தமிழக வெளியீட்டு உரிமை பெரும் விலைக்கு விற்பனை

சென்னை

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை பெரும் விலைக்கு விற்பனையாகியுள்ளது.

ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்'. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். டிவிவி நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.

தற்போது கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிந்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தவுள்ளது படக்குழு. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் 'ஆர்.ஆர்.ஆர்' வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையைக் கைப்பற்ற முன்னணித் தயாரிப்பாளர்கள் பலரும் போட்டியிட்டார்கள். இறுதியாக, லைகா நிறுவனம் பெரும் விலை கொடுத்து தமிழக உரிமையைக் கைப்பற்றி இருக்கிறது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

உலகமெங்கும் அக்டோபர் 13-ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம். ராம்சரண் கதாபாத்திரம், ஜூனியர் என்.டி.ஆர் கதாபாத்திரம் ஆகியவற்றுக்கான அறிமுக டீஸர் மட்டுமே இதுவரை வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் படத்தின் டீஸர், ட்ரெய்லர் உள்ளிட்டவை குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x