Published : 14 Feb 2021 05:29 PM
Last Updated : 14 Feb 2021 05:29 PM

வெற்றிமாறனைப் போற்றுகிறேன்; 'நவரசா'வில் நையாண்டி: ரகசியம் பகிரும் கௌதம் மேனன்

சென்னை

இன்றைய காலகட்டத்தில் 'மின்னலே' மாதிரியான கதையைப் படமாக்க இயலுமா என்ற கேள்விக்கு கெளதம் மேனன் பதிலளித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் காதலை மையப்படுத்திய படங்கள், காட்சிகள் என்றால் அதில் முதன்மையானவர் கெளதம் மேனன். அவருடைய காதல் காட்சிகளின் அழகியலுக்குப் பெரிய ரசிகர் கூட்டமே உண்டு. இவருடைய இயக்கத்தில் உருவான முதல் படம் 'மின்னலே'. இந்தப் படம் வெளியாகி 20 ஆண்டுகள் ஆகின்றன.

அவருடைய படங்களின் காதல் காட்சிகள், வாழ்க்கையில் நடந்தவை மற்றும் உறவினர்களின் வாழ்க்கையில் நடந்தது குறித்து கெளதம் மேனன் பகிர்ந்துள்ளார். இன்றைய காலகட்டத்தில் 'மின்னலே' மாதிரியான படத்தை எடுக்க முடியுமா என்ற கேள்விக்கு கெளதம் மேனன் கூறியிருப்பதாவது:

"அன்று எடுக்கும்போதே சில விஷயங்களை நாங்கள் பேசினோம். ஆம், ஆரம்பத்தில் நாயகன் நாயகியைப் பின்தொடர்கிறான். ஆனால், அவன் என்றும் எல்லை தாண்டுவதில்லை. வசீகரா பாடல் முடியும்போது நாயகியுடன் நெருக்கமாக இருக்கும் வாய்ப்பு இருந்தும் அதைச் செய்யாமல் விலகிவிடுவான்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் திரைப்படங்கள் சமூகப் பொறுப்புடன் இருக்க வேண்டும் என்று விமர்சிப்பது சில சமயங்களில் எல்லை மீறிச் செல்கிறது. எப்போதுமே எல்லோருக்கும் உகந்த விஷயத்தையே சொல்ல வேண்டும் என்பது படைப்பாற்றல் திறனைப் பாதிக்கும். வெற்றிமாறன் இதுபோன்ற விஷயங்களில் மிகவும் விழிப்புடன் இருப்பவர். அதற்காக அவரை நான் போற்றுகிறேன். எனது வாதம் என்னவென்றால், அது ஒரு திரைப்படம். அவ்வளவே. அதைத்தாண்டி எதுவும் இல்லை. 'நவரசா' ஆந்தாலஜி படத்தில் இதுகுறித்து நான் நையாண்டி செய்திருக்கிறேன்".

இவ்வாறு கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.

மேலும், "'மின்னலே' படத்துக்கு உங்கள் சொந்த அனுபவங்கள் பயன்பட்டிருக்கும்? ஆனால் இப்போது காதல், உறவுகளின் தன்மை மாறிவிட்டது. இப்போது எதை வைத்துக் காதல் கதைகள் எழுதுகிறீர்கள்?” என்ற கேள்விக்கு கெளதம் மேனன் தெரிவித்திருப்பதாவது:

"என்னைச் சுற்றி இருப்பவர்களிடம் பேசுகிறேன். என் திருமணத்துக்கு முன்னும் பின்னும் நிறைய அனுபவங்களைச் சந்தித்திருக்கிறேன். என் மனைவியுடனான உரையாடல்கள். எல்லாம் இன்றும் ஒத்துப்போகும் விஷயங்களே. 'காக்க காக்க' திரைப்படத்தில் ஜோதிகாவின் கதாபாத்திரத்தில் என் மனைவி ப்ரீத்தியின் குணங்கள் அதிகமாக இருக்கும். என் குடும்பத்தினர் படம் பார்க்கும்போது உடனடியாக அதைக் கண்டுபிடித்து விட்டனர்.

என் வீட்டுக்கு மேலே இருந்த இருவரைப் பார்த்தபின்தான் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்துக்கான கரு தோன்றியது. கதை எழுதும்போது அந்தக் கதாபாத்திரங்களில் எனது இயல்பை நிறைய வைப்பேன். வைத்து அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வேன். 'நவரசா'விலும் அதை நீங்கள் பார்க்கலாம்".

இவ்வாறு கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x