Published : 11 Feb 2021 10:56 AM
Last Updated : 11 Feb 2021 10:56 AM

சிவகார்த்திகேயனின் 'டான்' படப்பிடிப்பு தொடக்கம்

கோவை

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டான்' படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் தொடங்கப்பட்டுள்ளது.

'டாக்டர்' மற்றும் 'அயலான்' படங்களைத் தொடர்ந்து, 'டான்' என்னும் படத்தில் நடிக்கத் தயாராகி வந்தார் சிவகார்த்திகேயன். கல்லூரி மாணவராக நடிக்கவுள்ளதால், உடல் எடையைக் குறைத்துத் தயாரானார். இந்தப் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது.

இதன் படப்பிடிப்பு இன்று (பிப்ரவரி 11) கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளார். முதற்கட்டப் படப்பிடிப்பை சுமார் 40 நாட்கள் நடத்தப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இரண்டு கட்டங்களாகப் படப்பிடிப்பை நடத்தி, இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட முடிவு செய்துள்ளது.

நாயகியாக பிரியங்கா அருள் மோகன், வில்லனாக எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், காளி வெங்கட், பால சரவணன், ஆர்.ஜே.விஜய், சிவாங்கி உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனுடன் நடிக்கவுள்ளனர். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக கே.எம்.பாஸ்கரன், இசையமைப்பாளராக அனிருத் ஆகியோர் பணிபுரிகிறார்கள்.

'டான்' படத்தை முடித்துவிட்டு, அட்லியின் மற்றொரு உதவி இயக்குநர் இயக்கவுள்ள படத்திலும் நாயகனாக நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x