Published : 10 Feb 2021 03:50 PM
Last Updated : 10 Feb 2021 03:50 PM

ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு: ஆப்பிரிக்க காடுகளில் நடக்கும் சாகசக் கதை

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கவிருக்கும் கதை ஆப்பிரிக்க காடுகளில் நடக்கும் சாகசங்களை மையப்படுத்தி இருக்கும் என்று படத்தின் கதாசிரியரும், ராஜமௌலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் கூறியுள்ளார்.

'பாகுபலி' படத்தைத் தொடர்ந்து, தற்போது 'ஆர்.ஆர்.ஆர்' படத்தை இயக்கி வருகிறார் ராஜமெளலி. ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி, ஆலியா பட், உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்கள். டிவிவி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சுமார் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் இந்தப் படம் அக்டோபர் 13ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்துக்குப் பிறகு மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளதாக ராஜமெளலி உறுதிசெய்தார்.

தற்போது இந்தப் படம் ஒரு சாகசக் கதையாக இருக்கும் என்று படத்தின் கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் கூறியுள்ளார்.

"இவ்வளவு சீக்கிரம் அந்தப் படம் பற்றிப் பேச முடியாது. ஆனால், நான் ஆப்பிரிக்க காடுகளில் நடக்கும் சாகசங்களை மையப்படுத்திய கதையைத்தான் யோசித்து வருகிறேன். இன்னும் எதுவும் இறுதியாகவில்லை. ஆனால், இப்போதைக்கு அதற்கான முயற்சிகளைச் செய்து வருகிறேன். படப்பிடிப்பு குறித்து எதுவும் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. ஆனால், அடுத்த (ராஜமௌலி) படம் இதுதான்" என்று விஜயேந்திர பிரசாத் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x