Published : 07 Feb 2021 05:19 PM
Last Updated : 07 Feb 2021 05:19 PM

இளையராஜாவின் ஒரு பாடலைச் சுற்றித்தான் 'நவரசா' கதை: கவுதம் மேனன்

இளையராஜாவின் ஒரு பாடலைச் சுற்றித்தான் 'நவரசா' ஆந்தாலஜியில் தான் இயக்கும் குறும்படம் இருக்கும் என்று இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் கூறியுள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் இந்திய அளவில் ஒட்டுமொத்தத் திரையுலகிற்குமே கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டது. இதனால் பல்வேறு நடிகர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தனர்.

தற்போது மீண்டும் பழையபடி படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு, திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியாக ஆரம்பித்துவிட்டன.

இந்நிலையில் கோவிட்-19 நெருக்கடியால் பாதிக்கப்பட்ட திரையுலகத்தைச் சேர்ந்தவர்களுக்காக நிதி திரட்டும் நோக்கில் ஒரு முன்னெடுப்பாக, 'நவரசா' என்ற ஆந்தாலஜி தயாரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இயக்குநர்கள் மணிரத்னம், ஜெயேந்திரா இருவரும் தயாரிக்க, ஜஸ்ட் டிக்கெட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் உருவாகும் இந்தத் திரைப்படத்தில் ஏபி இண்டர்நேஷனல், ஆங்கிள் க்ரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் நிர்வாகத் தயாரிப்புப் பணிகளை மேற்கொள்கின்றன.

இந்தத் திரைப்படத்தில் பங்காற்றும் அத்தனை கலைஞர்களும், நிறுவனங்களும், திரைத்துறைக்கு ஆதரவு தர வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், இலவசமாகப் பணியாற்றியுள்ளனர்.

காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம், சாந்தம் என 9 நவரசங்களையும் வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளனர்.

கே.வி.ஆனந்த், கெளதம் மேனன், பிஜாய் நம்பியார், கார்த்திக் சுப்புராஜ், ஹலிதா ஷமீம், பொன்ராம், கார்த்திக் நரேன், ரதிந்தீரன், அரவிந்த்சாமி ஆகிய 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளனர். இதில் கவுதம் மேனன் இயக்கும் குறும்படத்தில் சூர்யா நடிக்கிறார், பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவை கவனிக்கிறார்.

சமீபத்தில் தி இந்து ஆங்கிலத்துக்கு கவுதம் மேனன் அளித்துள்ள பேட்டியில் இந்தக் குறும்படம் குறித்து பேசியுள்ளார்.

"சூர்யாவை இதில் நடிக்கக் வைக்க ஒரே ஒரு தொலைப்பேசி அழைப்புதான் தேவைப்பட்டது. புதுமுகம் நாயகியாக நடிக்கிறார். ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு உணர்ச்சியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நான் காதலைத் தேர்ந்தெடுத்தேன். இளையராஜா அவர்கள் அவரது ஒரு பாடலைப் பயன்படுத்த அனுமதி கொடுத்தார். அந்தப் பாடலைச் சுற்றித்தான் இந்தக் கதை இருக்கும்.

எனது மற்ற திரைப்படங்களைப் போல எனது இயல்பை இந்தக் குறும்படத்தின் கதாபாத்திரங்களிலும் பார்க்கலாம். திரைப்படங்களில் சமூக பொறுப்பு இருக்க வேண்டும் என்கிற வாதம் சமீப காலங்களில் சற்று அளவுக்கதிகமாகப் பேசப்பட்டு வருகிறது. நவரசா படத்தில் இது குறித்து நான் நையாண்டி செய்திருக்கிறேன்" என்று கவுதம் மேனன் பேசியுள்ளார்.

ஏற்கனவே 'புத்தம் புது காலை', 'பாவக் கதைகள்', அடுத்து வெளியாகவுள்ள 'குட்டி ஸ்டோரி' உள்ளிட்ட ஆந்தாலஜி திரைப்படங்களிலும் கவுதம் மேனன் (தலா) ஒரு குறும்படம் இயக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x