Published : 06 Feb 2021 06:35 PM
Last Updated : 06 Feb 2021 06:35 PM

'ட்ரிப்' - முதல் பார்வை

அந்தமானுக்கு அருகே இருக்கும் தீவுகளில் மனித மாமிசத்தைத் தின்ற ஆதிவாசிகள் கூட்டத்தைப் பற்றிய அறிமுகத்துடன் படம் தொடங்குகிறது.

நிகழ்காலத்தில் சுனைனா, ஜெனிஃபர், விஜே சித்து உள்ளிட்ட நண்பர்கள் கூட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கின்றனர். அங்கு காட்டில் கருணாகரன், யோகிபாபு இருவரையும் பார்த்து கொலைகாரர்கள் என்று பயந்து ஓடுகின்றனர்.

இன்னொரு பக்கம் நண்பர்கள் கூட்டத்தில் ஒவ்வொருவராக இறந்து போக, சுனைனா யோகிபாபு, கருணாகரன் இணையிடம் எதேச்சையாக சிக்குகிறார். இதன் பிறகு நடக்கும் சம்பவங்களே ட்ரிப்.

இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் தன் பெயருக்கு ஏற்றாற் போல பல ஆங்கிலப் படங்களைத் தழுவி தமிழில் ஒரு படத்தைக் கொடுக்க முயன்றுள்ளார். இது நகைச்சுவை திகில் படமா, அல்லது மனித மாமிசம் சாப்பிடுபவர்களின் படமா, த்ரில்லர் படமா எனக் கடைசி காட்சி வரை குழப்பம் நீள்கிறது.

யோகிபாபு, கருணாகரன் என இருவர் இருந்தும் படத்தில் நகைச்சுவை வறட்சி தொண்டையை அடைக்கிறது. நடிகர்களைப் பொருத்தவரை சுனைனா, ஜெனிஃபர், சித்து, கருணாகாரன், யோகிபாபு, பிரவீன்குமார், கல்லூரி வினோத் என அனைவருமே அவர்களால் முடிந்த அளவுக்கு அக்கறையாகவே நடித்துள்ளனர். மொட்டை ராஜேந்திரனுக்கு இந்தப் படத்திலும் ஒரு கதாபாத்திரம், வாய்ப்பு, அவ்வளவே.

அடர்ந்த காடு, காட்டுக்கு நடுவில் வீடு, காட்டில் நடக்கு சம்பவங்கள் என உதயசங்கரின் ஒளிப்பதிவும், சித்துகுமாரின் பின்னணி இசையும் படத்தை ஓரளவு காப்பாற்றுகிறது.

ஆனால் சிறுபிள்ளைத்தனமான கதை, திரைக்கதை, காட்சியமைப்புகள் படத்தை வெகுவாக பாதிக்கின்றன. பிரச்சினை என்று வந்தால் உடனடியாக போலீஸை அணுகலாமே, அது ஏன் நடக்கவில்லை என்பதற்கு கடைசி வரை விளக்கம் இல்லை.

சுனைனாவின் விளக்கத்தின் பின்பும் ஏன் நண்பர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை, தனியாக இருக்கக் கூடாது என்று சொல்லிவிட்டு தனியாகவே பிரிந்து செல்வது ஏன், இவர்களை தாக்க வருபவர்கள் ஜாம்பிக்களா, அல்லது மனித மாமிசம் தின்பவர்களா என்பது புரியவில்லை,

அடித்துப் போட்டாலே அவர்கள் இறந்துவிடுவார்கள் என்றால் நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து அவர்களை தாக்கிவிட்டே தப்பித்திருக்காலாமே என படம் நெடுக பல கேள்விகள் நமக்கு மன உளைச்சலைத் தருகின்றன.

படத்தின் ஆரம்பத்தில், 'நான் பார்த்த அத்தனை திரைப்படங்களிலிருந்து திருடுவேன்' என்கிற டேரண்டினோவின் கொள்கையோடு ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அது மட்டுமே படம் எடுக்கப் போதாது என்பதை யாராவது சொல்லிப் புரிய வைத்தால் நலம். நமக்கும் சரி, அவர்களுக்கும் சரி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x