Published : 03 Feb 2021 03:15 AM
Last Updated : 03 Feb 2021 03:15 AM

வித்தியாசமான கதைக் களம்.. புதுமையான திரைக்கதை; மாநாடு படத்தை மக்கள் கொண்டாடுவார்கள்: படக் குழுவினர் உற்சாகம்- இன்று டீஸர் வெளியீடு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது. இன்று (பிப்.3) சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘மாநாடு’ படத்தின் டீஸரும் வெளியாகிறது. இதையொட்டி, ‘மாநாடு’ படக் குழுவினருடன் பேசியதில் இருந்து..

இயக்குநர் வெங்கட் பிரபு: என் மனதுக்கு ரொம்ப நெருக்கமான படம் ‘மாநாடு’. படத்தின் களமே மாநாடுதான். ஒரு மாநாட்டை வித்தியாசமான கண்ணோட்டத்தில் காட்ட முயற்சி செய்திருக்கிறேன். வேற மாதிரி அரசியலை காட்டியுள்ளேன். ஒரு மாநாடு நடந்தால் அந்த ஊர் எப்படி இருக்கும், அதற்குள் என்னநடக்கிறது என்பதுதான் படம். அதனால்தான் ‘மாநாடு’ என்றே தலைப்பு வைத்துள்ளோம். முந்தைய படங்களைவிட புதிதாக சில விஷயங்களை இதில் முயற்சித்துள்ளேன். சிம்புவுக்கு இது ஒரு புதிய பரிமாணமாக இருக்கும்.

சிம்பு: எனக்கு மதத்தின் மீது பெரிதாக நம்பிக்கை இல்லை. ஆனால், கடவுள் நம்பிக்கை அதிகம். சிவனை ரொம்ப பிடிக்கும். இந்த கடவுள், அந்த கடவுள் என்று இல்லாமல் அனைத்தையும் ஒன்றாகப் பார்க்கிறேன். சமூகத்தில் பொதுவாகவே முஸ்லிம்கள் மீது தவறான பார்வை இருக்கிறது. அதை மாற்ற ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருந்தேன். அந்த விஷயத்தை பேசுவதற்கு இந்த படத்தில் கதை சரியாக அமைந்தது. அதற்காகவே இப்படத்தை ஒப்புக்கொண்டேன். வழக்கமான ஒரு கதையாக அல்லாமல், வித்தியாசமாக இருக்கும். எந்த மொழியிலும் நல்ல படம் வெளியானால் இந்தியாவில் கொண்டாடுவார்கள். அப்படி ஒரு படமாக ‘மாநாடு’ இருக்கும்.

யுவன்: ரொம்ப நாள் கழித்து வெங்கட் பிரபு, சிம்பு ஆகியோருடன் இணைந்துள்ளேன். எங்கள் மூவர் கூட்டணியில் இதுதான் முதல் படம். அவர்களது படம் என்றாலே பாடல்களுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அதைபூர்த்திசெய்யும் வகையில் கடுமையாகஉழைத்துக் கொண்டிருக்கிறோம். மோஷன் போஸ்டரின் பின்னணிஇசைக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்புக்கு நன்றி. கண்டிப்பாக டீஸரின் பின்னணி இசையும் ரசிகர்களுக்கு பிடிக்கும். படம் அதைவிட ரொம்ப பிடிக்கும்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி: சில படங்களின் கதையைக் கேட்டதும், இதை தயாரித்தால் சரியாக இருக்குமா என்று 2-3 நாட்கள் உட்கார்ந்து யோசிப்பேன். ஆனால், ‘மாநாடு’ கதையை வெங்கட் பிரபு கூறிய உடனே ‘தயாரிக்கிறேன்’ என்று சொல்லிவிட்டேன். இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ற கதையை, அற்புதமான திரைக்கதை மூலம் சொல்லியிருக்கிறார். சிம்பு ரசிகர்கள் மட்டுமின்றி, பாமர மக்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கிற படமாக இது இருக்கும். ஒரு மாநாட்டுக்குள் என்ன நடக்கிறது என்பதுதான் கதை. பார்வையாளர்களுக்கு ரொம்ப வித்தியாசமான களமாக இருக்கும்.

எஸ்.ஜே.சூர்யா: முழு கதையையும் கேட்டு முடித்தவுடனே, எழுந்து வெங்கட் பிரபுவை கட்டிப் பிடித்துக்கொண்டு, நடிக்கிறேன் என்று உற்சாகத்துடன் சொன்னேன். இது அந்த கதையில் இருந்த சந்தோஷத்தின் வெளிப்பாடுதான். கண்டிப்பாக அதே மனநிலையை ரசிகர்களும் உணர்வார்கள். ரொம்ப புதுமையான, சுவாரஸ்யமான, கச்சிதமானகதை. இந்திய சினிமா கண்டிராத திரைக்கதையாக இருக்கும். எனக்கும் சிம்புவுக்கும் உள்ள காட்சிகள் எல்லாம் வெகு சிறப்பாக இருக்கும். அதை திரையில் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

எஸ்.ஏ.சந்திரசேகர்: சிம்புவுக்கு ஒரு அழுத்தமான படமாக, நல்ல கமர்ஷியல் படமாக மட்டுமின்றி, இன்றைய கால சூழலுக்கு தேவையான படமாகவும் இருக்கும். ஒரு நல்ல கருத்தை முடிந்தவரை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறார் வெங்கட் பிரபு. என்னை சுற்றி ஆபத்து இருக்கும். அது எனக்கே தெரியாது என்பது மாதிரியான முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். மிகவும் தேர்வு செய்துதான் நடிக்கிறேன். ‘மாநாடு’ படத்தில் என் கதாபாத்திரம் ரொம்ப பிடித்ததால், நடிக்கிறேன்.

கல்யாணி ப்ரியதர்ஷன்: ‘மாநாடு’ படத்தில் நடித்த ஒட்டுமொத்த அனுபவமும் இடைவிடாத சந்தோஷமாகத்தான் இருந்தது. சிம்பு புத்திக்கூர்மை மிக்கவர். ஒவ்வொரு காட்சியிலும் புதிதாக ஏதாவது சேர்த்துக்கொண்டே இருப்பார். நாம் வசனங்களை வெறுமனே மனப்பாடம் செய்துவிட்டுப் போய் பேச முடியாது. ஒரு நடிகராக அவர் செய்யும் விஷயங்கள், சக நடிகராக நம்மை அந்த காட்சியில் அதிக கவனத்தோடு இருக்கச் செய்யும். அவரது நடிப்புக்கு பதில் அளிக்கும் விதமாக நாம் நடிக்க தயாராக இருக்க வேண்டும். இது மிகவும் சவாலான, உயிர்ப்பான, உற்சாகமான முறை. இதில் இன்னொரு உற்சாகம், வெங்கட் பிரபுவும் இதேபோலதான் படப்பிடிப்பு நடத்துவார். எப்போதும் அமைதியாக இருப்பார். நடக்கும் எந்த மாயமும் முன்னால் திட்டமிட்டது கிடையாது. காட்சியை படம்பிடிக்கும்போதுதான் திடீரென அந்த மாயம் நடக்கும். அதற்கு முழு சுதந்திரம் தந்துவிடுவார். ஒட்டுமொத்த குழுவும் ஒரே நேர்க்கோட்டில் பயணிப்பதால் எல்லாம் சரியாக அமைகிறது.

கருணாகரன்: ‘வெங்கட் பிரபுவுடன் பணிபுரியுங்கள், ஜாலியாக இருக்கும்’ என்று சொன்னார்கள். அதுபோலவே ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு ஜாலியாக இருக்கிறது. சிம்புவின் நண்பராக நடித்துள்ளேன். அவர் மிகவும் திறமைசாலி. பாடல், சண்டைக்காட்சி எதுவானாலும், ஒருமுறை பார்த்துவிட்டு சிங்கிள் டேக்கில் முடித்துவிடுவார்.

பிரேம்ஜி: அண்ணன் படம். ஷூட்டிங்கே எப்போதும் பிக்னிக் மாதிரிதான் இருக்கும். படப்பிடிப்பில் எல்லாம் தெரிஞ்ச முகமாகவே இருக்கும். அப்புறம், நான் சிம்புவின் தீவிர ரசிகர், நண்பர். அவருடன் பணிபுரிவது சந்தோஷம். ‘மாநாடு’ படத்தில் சிம்புவுக்கு நெருங்கிய நண்பராக நடித்துள்ளேன். படமே ஜாலியாக இருக்கும். மக்கள்திரையரங்குகளில் கட்டாயம் கொண்டாடுவார்கள். முதல் நாள் முதல் காட்சிக்கு ஆவலோடு காத்திருக்கிறேன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x