கபடி வீரராக துருவ் விக்ரம்: உண்மைக் கதையைப் படமாக்கும் மாரி செல்வராஜ்

கபடி வீரராக துருவ் விக்ரம்: உண்மைக் கதையைப் படமாக்கும் மாரி செல்வராஜ்
Updated on
1 min read

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் கதை, உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'கர்ணன்' படத்தை இயக்கியுள்ளார் மாரி செல்வராஜ். தாணு தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் எனத் தெரிகிறது.

'கர்ணன்' படத்தைத் தொடர்ந்து, துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் மாரி செல்வராஜ். இதனை இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தற்போது இதில் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் மாரி செல்வராஜ். இதில் கபடி வீரராக துருவ் விக்ரம் நடிக்கவுள்ளார். தமிழகத்தின் கடற்கரை கிராமத்தில் கஷ்டப்பட்டு வளர்ந்து, தேசத்தின் உயரிய விளையாட்டு கவுரவத்தை வென்ற, ஆசிய விளையாட்டுப் போட்டியில் தேசத்துக்காகத் தங்கம் வென்ற ஒருவரின் உண்மைக் கதை இது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கபடி விளையாட்டை மையப்படுத்தி சில படங்கள் வெளியாகியிருந்தாலும், இந்தப் படம் உண்மைக்கு மிக நெருக்கமாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in