Published : 17 Jan 2021 11:50 AM
Last Updated : 17 Jan 2021 11:50 AM

‘விஜய் படத்தில் என் பெயர்; கனவிலும் நினைக்கவில்லை’ - ரத்னகுமார் நெகிழ்ச்சி

விஜய் படத்தில் தனது பெயர் இடம்பெறும் என தான் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை என்று இயக்குநர் ரத்ன குமார் கூறியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'மாஸ்டர்'.

சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்தப் படத்தை லலித் குமார் வெளியிட்டுள்ளார். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இப்படத்தில் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனகர்த்தாவாக ‘மேயாத மான்’, ‘ஆடை’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் ரத்னகுமார் பணியாற்றியுள்ளார். இப்படத்தில் பணிபுரிய கிடைத்த வாய்ப்பு குறித்து ரதனகுமார் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:

கடந்த சில வருடங்களுக்கு முன்னால் விஜய் சாரின் படங்களின் முதல் நாள் முதல் காட்சியைப் பார்ப்பது எனக்கு மிகப்பெரிய விஷயமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் சில டிக்கெட்டுகளுக்காக சூரிய உதயத்துக்கு முன் எதிரி வீட்டுக் கதவை கூட தட்டியிருக்கிறேன். ஆனால் இந்த வருடம் ஒரு தளபதி படத்தில் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனகர்த்தாவாக பணியாற்றியிருக்கிறேன்.

தளபதி படத்தில் என் பெயரையும் என் முகத்தையும் பார்ப்பேன் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. மாஸ்டர் படத்தின் வாய்ப்பளித்த லோகேஷ் கனகராஜுக்கும், என்னை இத்தனை ஆண்டுகாலம் நம்பிய என் பெற்றோருக்கும், ஊக்கமளிக்கும் வார்த்தைகளை தந்த நண்பர்களுக்கு என்னுடைய நன்றி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x