Published : 11 Jan 2021 02:37 PM
Last Updated : 11 Jan 2021 02:37 PM

'அஞ்சாம் பாத்திரா' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு

கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி கண்ட 'அஞ்சாம் பாத்திரா' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொடூரமான முறையில் தொடர் கொலைகள் செய்யும் கொலைகாரனைப் பற்றிய விசாரணையே இந்தப் படம். குஞ்சாகோ போபன் இதில் டாக்டர் அன்வர் ஹுசைன் என்கிற மருத்துவர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஜனவரி 2020ல் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் வெற்றி பெற்றது. தற்போது பாலிவுட்டிலும் ரீமேக் செய்யப்படவுள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு முதல் பாகத்தை இயக்கிய மிது மானுவல் தாமஸ் இயக்க, இரண்டாம் பாகமும் உருவாகவுள்ளதாக செய்திகள் வந்தன. தற்போது இரண்டாம் பாகத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. 'ஆறாம் பாத்திரா' என்று இந்தப் படத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது.
குஞ்சாகோ போபனும் டாக்டர் அன்வர் ஹுசைன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் போபன், "எதிர்பார்ப்புகள் அதிகமாகும்போது பொறுப்புகளும் அதிகமாகும். 'அஞ்சாம் பாத்திரா' இரண்டாம் பாகத்துக்குத் தயாராவது அப்படி ஒரு மிகப்பெரிய பொறுப்பு. ஆனால் எங்களிடம் இருக்கும் சிறப்பான குழுவால் அது சாத்தியமே. மீண்டும் ஒரு சுவாரசியமான பயணத்துக்குத் தயாராகுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வருடம் திரையரங்குகளில் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தின் இந்தி ரீமேக்கையும் மிதுனே இயக்கவிருப்பதால் இரண்டு படங்களின் படப்பிடிப்பும் எப்போது, எப்படி நடக்கும் என்பது குறித்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x