Published : 06 Jan 2021 01:53 PM
Last Updated : 06 Jan 2021 01:53 PM

'காடன்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

சென்னை

பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காடன்' படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது.

பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காடன்'. நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் உள்ள இந்தப் படத்தை ஈராஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்தியா முழுக்க உள்ள காடு சார்ந்த பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே சமயத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. புல்கிட் சாம்ராட், சோயா ஹுசைன், விஷ்ணு விஷால், அஸ்வின் ராஜா, டின்னு ஆனந்த் உள்ளிட்ட பலர் ராணாவுடன் நடித்துள்ளனர். மூன்று மொழிகளிலுமே நாயகனாக ராணாவும், உடன் நடித்திருப்பவர்கள் வெவ்வேறு கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

2020-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி வெளியீடு என்று படக்குழு அறிவித்தது. ஆனால், கரோனா அச்சுறுத்தலால் திட்டமிட்டபடி வெளியாகவில்லை. தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் தமிழகம் தவிர்த்த இன்னும் பல மாநிலங்களில் 50% இருக்கைக்குத்தான் அனுமதி அளிக்கப்பட்டதால், 'காடன்' வெளியீடு தாமதப்படுத்தப்பட்டு வந்தது.

தற்போது, மார்ச் 26-ம் தேதி வெளியாகும் என்று 'காடன்' படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது. கரோனா அச்சுறுத்தலால் சுமார் ஓராண்டு கழித்து இந்தப் படம் வெளியீட்டுக்குத் திட்டமிடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக ஏ.ஆர்.அசோக் குமார், இசையமைப்பாளராக சாந்தனு மொய்த்ரா, ஒலி வடிவமைப்பாளராக ரசூல் பூக்குட்டி மற்றும் எடிட்டராக புவன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x