Last Updated : 28 Dec, 2020 02:15 PM

 

Published : 28 Dec 2020 02:15 PM
Last Updated : 28 Dec 2020 02:15 PM

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நம் நட்சத்திர அந்தஸ்து மாறும்: சாரா அலி கான்

தனக்கு நட்சத்திர அந்தஸ்தில் நம்பிக்கை இல்லை என்று நடிகை சாரா அலி கான் கூறியுள்ளார்.

2018ஆம் ஆண்டு, ’கேதர்நாத்’ திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சாரா அலி கான். இவர் நடிகர் சைஃப் அலி கான் - அம்ரிதா சிங் தம்பதியின் மகள். ஷர்மிளா தாகூர், மன்சூ அலிகான் பட்டோடியின் பேத்தி. தொடர்ந்து ’சிம்பா’, ’லவ் ஆஜ்கல் 2’, சமீபத்தில் ’கூலி நம்பர் 1’ என சாரா அலி கான் நடித்துளார்.

ரோஹித் ஷெட்டி, இம்தியாஸ் அலி, டேவிட் தவான் என நட்சத்திர இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்தது தனது அதிர்ஷ்டமே என்று கூறியிருக்கும் சாரா அலி கான் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் பேசியதாவது:

"நான் நட்சத்திர அந்தஸ்தைப் பார்ப்பதில்லை. நான் ரசிகர்கள் என்ற வார்த்தையை, நட்சத்திரம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த மாட்டேன். எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. வெள்ளிக்கிழமைக்கு வெள்ளிக்கிழமை இது மாறும். முன் வெள்ளிக்கிழமை படங்கள் வெளியாகும். இன்றைய நிலையில் அது எந்த நாளாகவும் இருக்கலாம். எனவே ஒவ்வொரு படத்தின் வெளியீட்டுக்கும் உங்களது அந்தஸ்து, வரவேற்பு என்பது மாறிக்கொண்டே இருக்கும். நமது நோக்கம், கடின உழைப்பு, தாகம் ஆகியவையே முக்கியம். மற்றவை எல்லாம் மாறும், மாறிக்கொண்டே இருக்கும்.

எனக்குப் பிடித்த தொழிலில் நான் இருப்பது என் அதிர்ஷ்டம். எனக்குத் தெரிந்த என் நண்பர்கள், அவர்களுக்குப் பிடிக்காத வேலையை தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செய்கின்றனர். அய்யோ வேலையா என்கிறார்கள். ஆனால், எனக்குக் கிடைத்திருப்பது வேலையே இல்லை. எனது வாழ்க்கையில் எனக்கு அதிக ஆர்வத்தைத் தருவது என் வேலையே. மற்ற எதுவும் முக்கியமில்லை" என்று சாரா பேசியுள்ளார்.

தற்போது அக்‌ஷய் குமார், தனுஷ் ஆகியோருடன் ‘அத்ரங்கி ரே’ என்கிற படத்தில் சாரா நடித்து வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x