Published : 28 Dec 2020 12:59 PM
Last Updated : 28 Dec 2020 12:59 PM

மன உளைச்சலில் இளையராஜா: பிரசாத் ஸ்டுடியோ வருகை ரத்து

சென்னை

நீதிமன்ற அனுமதியுடன் இளையராஜா இன்று பிரசாத் ஸ்டுடியோ செல்ல இருந்தார். இந்நிலையில் அவர் மன உளைச்சலில் இருப்பதால், அவரது வருகை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

40 ஆண்டுகளுக்கு மேலாக சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோ வளாகத்தில்தான் இளையராஜாவின் ஸ்டுடியோ செயல்பட்டு வருகிறது. அங்குதான் அவருடைய வெற்றிப் பயணம் தொடங்கியது. ஆகையால், இளையராஜாவுக்கு ரொம்பவே நெருக்கமான இடமாக அது கருதப்பட்டது.

பிரசாத் ஸ்டுடியோ வளாகத்திலிருந்து இளையராஜா காலி செய்ய வேண்டும் என்று ஸ்டுடியோ நிர்வாகம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் - இளையாராஜா இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கு சென்னை 17-வது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

மேலும், தான் எழுதிய இசைக் கோர்ப்புகள், இசைக் கருவிகள், விருதுகள் உள்ளிட்ட பொருட்களை எடுத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும், தியானம் செய்யவும் அனுமதிக்க வேண்டும் என்று இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது முதலில் ஆட்சேபம் தெரிவித்தாலும், பின்பு சில நிபந்தனைகளுடன் அனுமதிக்க பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் சம்மதம் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற வாதத்தில், நீதிபதி சதீஷ்குமார் ஒரு நாள் மட்டும் காலை 9 மணி முதல் 4 மணிக்குள் பிரசாத் ஸ்டுடியோவிற்குள் சென்று தியானம் செய்யவும், உடைமைகளை எடுத்துவரவும் இளையராஜாவிற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். இளையராஜாவுடன் அவரது ஓர் உதவியாளர் மற்றும் இரண்டு இசை உதவியாளர்கள் செல்லவும் அனுமதி அளித்தார்.

இந்நிலையில், இன்று (டிசம்பர் 28) காலை 9 மணியளவில் இளையராஜா பிரசாத் ஸ்டியோவுக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனால் தனது பொருட்கள் எல்லாம் எடுத்துவிட்டு, தியானம் செய்துவிட்டு பிரசாத் ஸ்டுடியோவை இளையராஜா காலி செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் காவல்துறையினர், பத்திரிகையாளர்கள் குவிந்தனர். ஆனால், திட்டமிட்டபடி இளையராஜா வரவில்லை.

இளையராஜா தரப்பிலும், பிரசாத் ஸ்டியோ தரப்பிலும் வழக்கறிஞர்கள் வந்தனர். இளையராஜா மன உளைச்சலில் இருப்பதால், இன்று அவர் வரவில்லை என்று அவருடைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். முதலில், இளையராஜா அறையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்த தகவல், அவருக்குச் சொல்லப்பட்டது. இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்ததால் அவர் வரவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இளையராஜா தனது ஸ்டுடியோவைக் காலி செய்வதற்காக 2 லாரிகளும் வர வைக்கப்பட்டுள்ளன.

இளையராஜா எப்போது வருவார், இன்று ஸ்டுடியோவைக் காலி செய்துவிடுவாரா உள்ளிட்ட விவரங்கள் விரைவில் தெரியவரும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x