Published : 27 Dec 2020 02:41 PM
Last Updated : 27 Dec 2020 02:41 PM

'மாஸ்டர்' படத்தின் கதைக்களம்

சென்னை

'மாஸ்டர்' படத்தின் கதைக்களம் தெரியவந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஒட்டுமொத்த வெளியீட்டு உரிமையையும் லலித் குமார் கைப்பற்றியுள்ளார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதால் ஜனவரி 13-ம் தேதி வெளியிட 'மாஸ்டர்' படக்குழு தயாராகி வருகிறது. தணிக்கையில் 'யு/ஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாகவுள்ளது.

ஒரு படம் வெளிநாடுகளில் உள்ள திரையரங்குகளில் வெளியாகும்போது, அதன் இணையத்தில் படத்தின் கதைச் சுருக்கத்தை வெளியிட்டு இருப்பார்கள். அப்படி 'மாஸ்டர்' வெளியாகவுள்ள திரையரங்கின் இணையம் ஒன்றில் கதைச் சுருக்கம் வெளியாகியுள்ளது. இது இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

அந்தக் கதைச் சுருக்கத்தில் கூறியிருப்பதாவது:

"மதுவுக்கு அடிமையாக இருக்கும் இளம் பேராசிரியரான விஜய், அதிலிருந்து மீள, 3 மாதம் சீர்திருத்த இல்லம் ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிய அனுப்பப்படுகிறார். அந்த இல்லம் விஜய் சேதுபதியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அவர் அந்த இல்லத்தில் இருக்கும் சிறுவர்களைத் தனது சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார். அங்கு வரும் விஜய்க்கும் விஜய் சேதுபதிக்கும் இடையே நடக்கும் மோதலே இந்தப் படம்".

இவ்வாறு திரையரங்க இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக் கதையை ஸ்கிரீன் ஷாட் எடுத்துப் பலரும் பகிரவே, திரையரங்க இணையத்திலிருந்து கதைச் சுருக்கம் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x