Published : 24 Dec 2020 08:25 PM
Last Updated : 24 Dec 2020 08:25 PM

முத்தையா - விக்ரம் பிரபு பட வெளியீட்டில் மாற்றம்: சன் பிக்சர்ஸ் முடிவு

முத்தையா - விக்ரம் பிரபு படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் திட்டமிட்டபடி முடிவடையாத காரணத்தால், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களுடைய திட்டத்தில் சில மாறுதல்களைச் செய்துள்ளது.

'தேவராட்டம்' படத்துக்குப் பிறகு முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர். இதன் படப்பிடிப்பு மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் மும்முரமாக நடைபெற்று வந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிகிறார்.

முதலில் 'பேச்சி' எனத் தலைப்பிட்டு இருந்த இந்தப் படத்தைப் பொங்கல் பண்டிகை அன்று சன் டிவியில் ஒளிபரப்பவும், அடுத்த நாள் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியிடவும் திட்டமிட்டார்கள். இதனை முன்வைத்தே பணிகள் துரிதமாக நடைபெற்றன. அதில் சில மாற்றங்களைத் திட்டமிட்டது சன் பிக்சர்ஸ்.

திரையரங்குகள் திறக்கப்பட்டதால் முதலில் திரையரங்குகளில் திரையிடலாம், பின்பு சன் டிவியில் ஒளிபரப்பலாம் என முடிவு செய்தார்கள். அதற்காக டிசம்பர் 25 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதியில் ஏதேனும் ஒரு தேதியைத் திரையரங்க வெளியீட்டுக்குத் தேர்வு செய்து வைத்திருந்தார்கள். ஆனால், பணிகள் திட்டமிட்டபடி முடிவடையவில்லை.

இதனால், தற்போது முதலில் திட்டமிட்டபடி நேரடியாகப் பொங்கல் பண்டிகை அன்று இந்தப் படம் சன் டிவியில் ஒளிபரப்பாவது உறுதியாகியுள்ளது. பலரும் 'பேச்சி' என்ற பெயர் பொருத்தமாக இல்லை என்று கூறவே, 'புலிக்குட்டிப் பாண்டி' என்று படத்தின் பெயரை மாற்றியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜனவரி 1-ம் தேதி திரையரங்க வெளியீடாக இருந்தால், இந்நேரத்துக்குப் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தொடங்கியிருக்கும். இன்னும் விளம்பரப் பணிகள் இன்னும் தொடங்கப்படாததால், இந்தப் படம் பொங்கல் பண்டிகைக்கு சன் டிவியில் நேரடி ஒளிபரப்புதான் என்பது உறுதியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x